உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி படத்தில் இருந்து விலகியது ஏன்?: சுந்தர் சி சொன்ன காரணம்

ரஜினி படத்தில் இருந்து விலகியது ஏன்?: சுந்தர் சி சொன்ன காரணம்


நடிகர்கள் ரஜினியும், கமலும் நீண்ட வருடங்களுக்கு பின் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். அதனை 'ஜெயிலர்' இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். அதற்கு முன்னதாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினி நடிப்பதாக முடிவானது. ரஜினியின் 173வது படமாக அறிவிக்கப்பட்ட இந்த படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக அறிவித்தனர். ஆனால் திடீரென தவிர்க்க முடியாத சூழலால் இப்படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி அறிக்கை வெளியிட்டார்.

அடுத்து அப்படத்தை 'டான்' இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அறிவித்துள்ளனர். அவரும் மாற்றப்படலாம், 'டிராகன்' இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்குவார் என்றும் செய்தி வெளியானது. ஆனால் இதுவரை சிபி சக்கரவர்த்தியே அதிகாரப்பூர்வ அறிவிப்பாக உள்ளது. படம் துவங்கும் வரை எதுவும் உறுதியாக தெரியவில்லை.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சுந்தர்.சி, 'ரஜினி 173' படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். இதுப்பற்றி சுந்தர் சி பேசுகையில், ''எனக்கும் நடிகர் ரஜினி மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் எந்த வருத்தமும் இல்லை. என்னால் என் கதைக்களத்தை மட்டுமே படமாக எடுக்க முடியும். கடந்த 16 ஆண்டுகளாக என் படங்களைப் பார்த்தாலே தெரியும். என் படங்களின் கதை மிகச் சாதாரணமாக இருக்கும். அதுபோன்ற படங்களில் வேலை செய்யவே பிடித்திருக்கிறது.

ரஜினி சாருடன் இணைந்தால் இயல்பாகவே பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிடும். அந்த எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியுமா என்கிற தயக்கம் இருந்தது. நான் எளிதாக சமரசம் செய்துவிடுவேன். அதனால், என்னுடைய படமாக அது இருக்குமா என்ற குழப்பமும் ஏற்பட்டது. அதனால், முறையாக நடிகர் ரஜினி சாரிடமும் தயாரிப்பு நிறுவனத்திடமும் கூறிவிட்டு வெளியேறிவிட்டேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !