பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தாலும், சில கலைஞர்களின் வாழ்க்கை பரிதாபமாகத்தான் முடிந்திருக்கிறது. அப்படியானவர்களில் ஒருவர் உசிலை மணி. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த சுப்லீரமணிதான் உசிலை மணி. உசிலம்பட்டியில் காப்பி கடை நடத்திய அவர் நரசுஸ் காப்பி விளம்பர படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
இதனால் உசிலம்பட்டியிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். அவரது கனத்த உடம்பே அவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. சிறு சிறு வேடங்களில் ஆயிரம் படத்திற்கு மேல் நடித்தாலும், நத்தையில் முத்து, சோப்பு சீப்பு கண்ணாடி, பாதுகாப்பு, இதயக்கனி, கண்ணன் என் காதலன், நம்ம வீட்டு தெய்வம், பிராயச்சித்தம், நீரும் நெருப்பும், உழைக்கும் கரங்கள், சிம்லா ஸ்பெஷல், புதுவெள்ளம், நாலும் தெரிந்தவன், ஜீவனாம்சம், நீதி, செல்வம், பெற்றால் தான் பிள்ளையா, சிவப்புச் சூரியன், காவல் தெய்வம், சாது மிரண்டால், வாலிப விருந்து, என்ன முதலாளி சவுக்கியமா, தெய்வம் பேசுமா, பிள்ளைச்செல்வம், அதிர்ஷ்டக்காரன், மறுபிறவி, கண் மலர், தலைவன், கவரிமான், அன்புள்ள ரஜினிகாந்த், பில்லா, உயர்ந்த உள்ளம், முத்தான முத்தல்லவோ, உரிமைக்குரல் போன்றவை முக்கியமான படங்கள்.
காலப்போக்கில் உடல் பருமனால் வரும் பிரச்னைகளில் சிக்கிய உசிலைமணியால் வெளியூர் படப்பிடிப்புகளுக்கு செல்ல முடியவில்லை, உள்ளூர் படப்பிடிப்புகளுக்கும் அவரை அழைத்து வர சிக்கல்கள் எழுந்தது. இதனால் வாய்ப்புகள் குறைந்தது வறுமையில் தள்ளப்பட்டார். சர்க்கரை வியாதியினால் கால்கள் அகற்றப்பட்டு முடங்கிப் போனார். 1996ம் ஆண்டு தனது 62வது வயதில் காலமானார். எந்த உடல் அவருக்கு சினிமா வாழ்க்கை தந்ததோ அதே உடல் அவரது மரணத்திற்கும் காரணமானது.