பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில்
1959ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் 'ஆன வளர்த்த வானம்பாடி'. இதனை பி.சுப்ரமணியன் என்பவர் இயக்கி இருந்தார். திக்குறிச்சி சுகுமாறன், மிஸ்.குமாரி ஆகியோர் நடித்தனர். இது காட்டுக்குள் தனித்து விடப்பட்ட குழந்தை அங்கேயே வளர்ந்து பின்னர் தன் பெற்றோருடன் எப்படி சேர்கிறது என்பது மாதிரியான கதை. இந்த படம் 'யானை வளர்த்த வானம்பாடி' பெயரில் டப் செய்து தமிழில் வெளியிடப்பட்டது. இங்கும் வரவேற்பை பெற்றது.
1971ம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' என்ற பெயரில் தமிழில் தயாராகி, பின்னர் அது மலையாளத்தில் டப் செய்யப்பட்டது. இதில் ஜெமினி கணேசன், மனோரமா உள்ளிட்டோர் நடித்தனர். முதல் பாகத்தை இயக்கிய பி.சுப்ரமணியமே இதனையும் இயக்கினார். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். ஆனால் முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வரவேற்பை பெறவில்லை. முதல் பாகம் கருப்பு வெள்ளையிலும், இரண்டாம் பாகம் வண்ணத்திலும் தயாராகி இருந்தது.