சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது கவலை அளிக்கிறது; சொல்கிறார் அமெரிக்க தூதர்
சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது கவலை அளிக்கிறது; சொல்கிறார் அமெரிக்க தூதர்
ADDED : செப் 12, 2025 07:12 AM

வாஷிங்டன்: இந்தியாவை ஒரு அமெரிக்க நட்பு நாடாக வலுப்படுத்துவதும், சீனாவிடம் இருந்து விலக்கி அழைத்துவரவும் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் பொருட்கள் வாங்குவதால் இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு அமெரிக்கா விதித்தது. இதனால், இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடி தன்னுடைய நண்பர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர், இந்தியா, அமெரிக்கா இடையே வரி விதிப்புகளில் பெரிய இடைவெளி இல்லை என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது; வரி விதிப்பில் இந்தியாவும், அமெரிக்காவும் வெகு தொலைவில் இல்லை. வரும் வாரங்களில் வர்த்தக பிரச்னைகள் தீர்க்கப்படக்கூடும். அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் நீண்டகால மூலோபாய இலக்குகள் உள்ளன. இந்தியா இன்று அமெரிக்காவிற்கு உள்ள முதன்மையான நட்பு நாடுகளில் ஒன்று.
சீனாவுடன் இருப்பதை விட, அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு நெருக்கமான உறவு உள்ளது. இந்தியாவுக்கு சீனாவை விட அமெரிக்காவுடன் அதிக பொதுவான விஷயங்கள் உள்ளன. நீண்டகாலமாக, இந்த உறவில் அந்த தனிப்பட்ட தொடர்பு இல்லை. அதை மீண்டும் கொண்டு வருவேன். இந்த விஷயத்தில் அதிபர் டிரம்ப்பே தீவிரம் காட்டி வருகிறார்.
இந்தியா, சீனாவுடன் நெருக்கம் காட்டுவது கவலையளிக்கிறது. சீன விரிவாக்கவாதம் இந்தியாவின் எல்லையில் மட்டுமல்ல, இந்த பகுதி முழுவதும் உள்ளது. இந்தியாவை ஒரு அமெரிக்க நட்பு நாடாக வலுப்படுத்துவதும், சீனாவிடம் இருந்து விலக்கி அழைத்துவர முன்னுரிமை கொடுப்போம், என்றார்