1.55 கோடி மரக்கன்றுகள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை
1.55 கோடி மரக்கன்றுகள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை
ADDED : ஆக 18, 2025 01:18 AM

சென்னை: பசுமை பரப்பை அதிகரிக்க, 1,045 பண்ணைகளில், 1.55 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, அவற்றை நடவு செய்யும் பணியில் ஊரக வளர்ச்சி துறை ஈடுபட்டு வருகிறது.
நகர்ப்புறங்களை போன்றே, ஊரகப்பகுதிகளிலும் சாலைகள் விரிவாக்கம், அரசு கட்டடங்கள் கட்டுமானம், நீர்நிலைகளை துார்வாருதல் போன்றவை நடப்பதால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. இதனால், கிராமங்களில் பசுமை பரப்பு குறைந்து வருகிறது.
வனப்பகுதிகள் எனவே, சாலைகள், அரசு கட்டட வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், நீர்நிலைகளின் கரையோரம் மற்றும் வனப்பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில், மரங்களை வளர்க்க தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.
இப்பணிகளை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, ஊரகப்பகுதி களில், 1,045 இடங்களில், மரக்கன்றுகள் உற்பத்தி பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நடப்பு நிதியாண்டில், 1.55 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புளி, பெருநெல்லி, நாவல், மா, தேக்கு, புங்கன், வேம்பு, வேங்கை, நீர் மருது, மயில் கொண்டை, இலுப்பை, பூவரசு, காட்டுவா, மகா கனி, செண்பகம், வாகை, கருமருது.
அயல்வாகை, புன்னை, கொடுக்காபுளி, விளா, செம்மரம், சொர்க்கம் உள்ளிட்ட, 50 வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.
வேகமாக வளரும் இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இந்த நேரத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தால், அவை வெயிலின் தாக்கமின்றி வேகமாக வளர்ந்து விடும்.
முன்னர், சிறிய மரக்கன்றுகள் தயாரிக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. அவற்றை பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.
தற்போது, 6 அடி உயர மரக்கன்றுகளை நடவு செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.
இப்பணியில் ஈடுபடும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு, தினக்கூலியாக 319 ரூபாய் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு இரண்டு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.