கடல் ஆமை இறப்பை கட்டுப்படுத்த ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கீடு
கடல் ஆமை இறப்பை கட்டுப்படுத்த ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : டிச 25, 2025 06:28 AM

சென்னை: கடல் ஆமைகள் இறப்பை கட்டுப்படுத்த, விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை வலைகளில், 'ஆமை விலக்கு சாதனம்' பொருத்த, மத்திய - மாநில அரசுகள் 6.29 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளன.
தமிழகத்தில் சென்னை கோவளம், செங்கல்பட்டு, துாத்துக்குடி, மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆமைகள் இறந்து, கரை ஒதுங்குகின்றன.
இறக்கும் ஆமைகளின் உடல்கள், சிதைந்த நிலையில் கரை ஒதுங்குவதால், இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால், இதுவரை வந்த தரவுகளின் அடிப்படையில், மூச்சுத்திணறல் காரணமாகவே அதிக அளவில் ஆமைகள் உயிரிழந்துள்ளன என்று கூறப்படுகிறது.
விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை வலை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே, மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை வலைகளில், 'ஆமை விலக்கு சாதனம்' பொருத்த வேண்டும் என, வனத்துறை மற்றும் ஆமைகளை பாதுகாக்கும் தன்னார்வல அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
அதன் அடிப்படையில், தமிழக அரசு சார்பில், ஆமை விலக்கு சாதனம் கொள்முதல் செய்ய, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை வலைகளில், குறிப்பிட்ட பகுதியை கட் செய்து, அந்த பகுதியில் ஆமை விலக்கு சாதனத்தை பொருத்தினால், அந்த ஓட்டை வாயிலாக கடல் ஆமைகள் வெளியேறி விடும்.
தற்போது, தமிழகம் முழுதும், 2,613 மீனவர்களுக்கு, ஆமை விலக்கு சாதனங்கள் வழங்க மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு 3.77 கோடி; மாநில அரசு 2.51 கோடி என மொத்தம் 6.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆமை விலக்கு சாதனங்கள், இன்னும் இரண்டு மாதங்களில் விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும். இதன் காரணமாக, 80 சதவீதம் வரை கடல் ஆமைகள் இறப்பு குறைய வாய்ப்பு உள்ளது' என்றனர்.

