குவாரிகளில் டன்னுக்கு 100 ரூபாய் மாமூல்: அமைச்சர் ரகுபதி மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
குவாரிகளில் டன்னுக்கு 100 ரூபாய் மாமூல்: அமைச்சர் ரகுபதி மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
ADDED : ஆக 24, 2025 10:14 PM

திருச்சி: அமைச்சர் ரகுபதி, குவாரி உரிமையாளர்களிடம் டன்னுக்கு நூறு ரூபாய் மாமூல் வசூலிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், குற்றம் சாட்டினார்.
தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், துறையூர் தொகுதி, திருச்சி சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:
அமைச்சர் ரகுபதி எட்டப்பர், அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டவர். சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டுச் சென்றவர். திமுகவில் அடைக்கலம் புகுந்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, அவர்கள் கொடுக்கிற செய்தியை பேசிக்கொண்டு இருக்கிறார்.
அதிமுக தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி அவரை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால், அவர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாகச் சொல்கிறார். நான் நிரபராதி என்று விடுதலையாகி இங்கு நிற்கிறேன். திமுக அமைச்சர்கள், முதல்வர், முன்னாள் அமைச்சர்களுக்கு தில்லு திராணியிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துங்கள்.
ரகுபதி அவர்களே…. நீங்கள் எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது நானும் எம்.எல்.ஏ.வாக இருந்தேன், அப்போது, உங்கள் சொத்து என்ன? சாதாரண திருவள்ளுவர் பஸ்ஸில் ஏறி சென்னைக்கு வருவார். அவருடைய அண்ணன் சேலத்தில் வேலையில் இருந்தார். அவரைப் பார்க்க பஸ்ஸில் வந்துசெல்வார்.
நான் அப்போது 1992ல் சேலம் மாவட்டச் செயலாளராக இருந்தேன். இப்போது உங்களுக்கு எத்தனை காலேஜ் இருக்குது, எவ்வளவு பினாமி சொத்து இருக்குது, நாவடக்கம் தேவை. சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. கீழே இருக்கும் சக்கரம் மேல வரும், அப்போது நீங்கள் என்னென்ன ஊழல் செய்தீர்களோ, அத்தனையும் தோண்டி எடுக்கப்பட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். சாதாரண மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்றாலும் மேலே வர முடிகிறதா..? குடும்பம் நடத்துவதே பெரிய கஷ்டமாக இருக்கிறது. இவர் என்ன பணம் காய்க்கும் மரம் வைத்திருக்கிறாரா..? இவ்வளவு பெரிய ஊழல் செய்துவிட்டு நம் மீது பழிபோடுகிறார்.
ரகுபதி துறையில் பல்வேறு ஊழல் நடக்கிறது. சுரங்கத்துறை அவரிடம் தான் இருக்கிறது. இப்போது ஒரு தகவல் வருகிறது, டன்னுக்கு 100 ரூபாய் கிரஷர் உரிமையாளர்களிடம் கேட்பதாகத் தகவல் வருகிறது. எல்லாவற்றையும் தோண்டி எடுத்தால் நீங்கள் இருக்கும் இடமே வேறிடமாக இருக்கும்.
மக்கள் எப்படி வீடு கட்ட முடியும்?
அதேமாதிரி ஜல்லி, கிரஷர் உரிமையாளர்களுக்கும் ஒரு தகவல் சொல்லிக்கொள்கிறேன். யாராவது சட்டத்துக்குப் புறம்பாக டன்னுக்கு 100 ரூபாய் கொடுப்பது தெரியவந்தால் அதிமுக ஆட்சி அமைந்ததும் உங்க கிரஷர் தடுத்து நிறுத்தப்படும். நீங்கள் யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள். நீங்கள் 100 ரூபாய் ஏற்றினால், அவர் 500 ரூபாய் விலை ஏற்றிவிடுவார். பிறகு மக்கள் எப்படி வீடு கட்ட முடியும்? ரகுபதி அவர்களே இதை தொடர்ந்தால் நீதிமன்றப் படி மீண்டும் ஏறுவீர்கள். பாதுகாப்பான இடத்துக்கு உங்களை அனுப்பிவிடுவார்கள்.
ஜல்லி கிரஷர் உரிமையாளர்களை மிரட்டுகிறார்கள். அதாவது ட்ரோன் பறக்க விட்டு கிரஷரை அளவு செய்வார்களாம். உங்கள் ஆட்களும் கிரஷர் நடத்துகிறார்கள். எங்களுக்கும் ட்ரோன் விட்டு அளக்கத் தெரியாதா? மத்திய அரசு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இனியாவது டன்னுக்கு 100 ரூபாய் வாங்குவதை நிறுத்திவிடுங்கள். தொடர்வது தெரிந்தால் மக்கள் துணையோடு தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.