இலவச மின் இணைப்பு வழங்க பணம் இல்லையா, மனம் இல்லையா? அதிகாரிகளை வறுத்தெடுக்கும் விவசாயிகள்
இலவச மின் இணைப்பு வழங்க பணம் இல்லையா, மனம் இல்லையா? அதிகாரிகளை வறுத்தெடுக்கும் விவசாயிகள்
UPDATED : ஆக 15, 2025 01:14 AM
ADDED : ஆக 15, 2025 12:35 AM

சென்னை:தமிழகத்தில் இந்தாண்டில், 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும், அதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள், மின் வாரிய அதிகாரிகளை தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'இலவச விவசாய இணைப்பு வழங்க அரசிடம் பணம் இல்லையா; அதை வழங்க உங்களுக்கு மனம் இல்லையா' என கேட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதி ஆகிய பிரிவுகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு மற்றும் மின்சாரம் இலவசம்.
சுயநிதி பிரிவில், மின் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும்; மின்சாரம் மட்டும் இலவசம்.
இதற்காக மின் வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. மின் வாரியமும், அரசும் நிதி நெருக்கடியில் உள்ளன.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கையில் தான், இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
அதுவும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில், 'சீனியாரிட்டி' அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதுவரை, 2 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
எனவே, இந்த நிதியாண்டில், 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவதற்கான அறிவிப்பை, கடந்த ஏப்ரலில், அப்போது மின் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
விவசாய மின் இணைப்பு வழங்கும் பணிகளை துவக்க, மின் வாரியம் சார்பில் அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. இன்னும் அனுமதி கிடைக்காததால், மின் இணைப்பு வழங்கும் பணி துவங்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள் தினமும், சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மின் வாரிய இணையதளத்தில் உள்ள தலைமை பொறியாளர்கள் மற்றும் உயரதிகாரிகளின் தொலைபேசி எண்களை பார்த்து, விவசாயிகள் தொடர்பு கொள்கின்றனர்.
'ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை ஏன் மின் இணைப்பு வழங்கப்படவில்லை? இதற்கு, அரசிடம் நிதி இல்லையா அல்லது உங்களுக்கு அதை செய்ய மனம் இல்லையா; இன்னும் ஒரு மாதத்தில் மழைக்காலம் துவங்க உள்ளது.
'எப்போது தான் மின் இணைப்பு வழங்கப்படும்' என, சரமாரியாக கேள்விகளை கேட்டு வறுத்தெடுக்கின்றனர்.விவசாய இணைப்பு தொடர்பாக தினமும், 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
இது குறித்து, உயரதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அவர்கள், 'அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்கு முன்னதாக மின் இணைப்பு வழங்கும் பணிகள் துவக்கப்படும்' என்று தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரூ.7,000 கோடி செலவு
தமிழகத்தில் தற்போது, 23.60 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. ஒரு இணைப்புக்கு ஆண்டுக்கு சராசரியாக, 30,000 ரூபாய் செலவிடப்படுகிறது.
அரசுக்கு ஆண்டுக்கு, சாதாரண பிரிவில் வழங்கப்பட்ட மின் இணைப்புகளால் 5,926 கோடி ரூபாயும், சுயநிதி பிரிவில் வழங்கப்பட்ட இணைப்புகளால் 1,100 கோடி ரூபாயும் செலவாகிறது.