சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 19, 2025 12:45 PM

சென்னை: சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (செப் 19) இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அதேபோல், சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
பின்னர், அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை வெளியேற்றிவிட்டு, சோதனை நடத்தப்பட்டது. சந்தேகப்படும் வகையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மும்பை போலீசார் கூறியதாவது: மும்பை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உயர் நீதிமன்ற வளாகத்தை சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை.
உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது இரண்டாவது முறை. சமீபத்தில் இதேபோன்ற மிரட்டல் வந்தது; முழு உயர் நீதிமன்றமும் காலி செய்யப்பட்டது. ஆனால் சோதனையில் புரளி என்பது உறுதியானது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.