விஷம் அருந்தி தொழிலாளி தற்கொலை
காங்கயம் பஸ் ஸ்டாண்டில் ஆண் ஒருவர், பூட்டிய கடைக்கு வெளியே இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், காங்கயம், சேடங்கிபாளையத்தை சேர்ந்த நல்லசிவம், 44 என்பதும், சர்க்கரை நோயால், பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்தது தெரிந்தது. வீடடில் இருந்து வெளியேறி தனியாக இருந்தவர், நேற்று முன்தினம் இரவு, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாய்க்காலில் மிதந்த ஆண் சடலம்
திருப்பூர் மாவட்டம், முத்துார் - வள்ளியரச்சல் வழியாக செல்லும் எல்.பி.பி., கால்வாயில் ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர், 45 வயது உடையவர், அவர் பெயர், விலாசம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை திருட்டு: வாலிபர் கைது
திருப்பூர், முருகம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிணி, 23. இவர் கடந்த, இரு வாரங்களாக வெளியூர் சென்றிருந்தார். பின், திரும்பிய போது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 2 சவரன் நகை, 40 கிராம் வெள்ளி திருடு போயிருந்தது. புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் விசாரித்தனர். திருட்டில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளரின் மகன் சுதாகர், 29 என்பது தெரிந்து, அவரை கைது செய்தனர்.