/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பசுந்தாள் உர விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
/
பசுந்தாள் உர விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : செப் 09, 2025 10:08 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில் பசுந்தாள் உர விதைகள் பெற விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு ஒரு கிலோ பசுந்தாள் உர விதைகள் 62.50 ரூபாய் மானியத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து உத்திரமேரூர் வேளாண்மை உதவி இயக்குநர் முத்து லட்சுமி கூறியதாவது:
உத்திரமேரூர் வட்டாரத்தில் பிரதான பயிராக நெல்லை விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்கின்றனர். தொடர்ந்து, ஒரே பயிரை சாகுபடி செய்வதால் மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.
பயிர் மகசூல் அதிகரிக்க விவசாயிகள், வேதி உரங்களை பயன்படுத்துவதால் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் குறைகிறது.
இதை தவிர்க்க, உத்திரமேரூர் வட்டாரத்தில் 12 டன் பசுந்தாள் உர விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு மானியத்தில் ஒரு கிலோ 62.50 ரூபாய் என, ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, உத்திர மேரூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு சென்று பசுந்தாள் உர விதைகளை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.