/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிருப்தி துாய்மை பணியாளர்களை குஷிப்படுத்த இலவச உணவு! 3 வேளைக்கும் வழங்க ரூ.150 கோடிக்கு 'டெண்டர்'
/
அதிருப்தி துாய்மை பணியாளர்களை குஷிப்படுத்த இலவச உணவு! 3 வேளைக்கும் வழங்க ரூ.150 கோடிக்கு 'டெண்டர்'
அதிருப்தி துாய்மை பணியாளர்களை குஷிப்படுத்த இலவச உணவு! 3 வேளைக்கும் வழங்க ரூ.150 கோடிக்கு 'டெண்டர்'
அதிருப்தி துாய்மை பணியாளர்களை குஷிப்படுத்த இலவச உணவு! 3 வேளைக்கும் வழங்க ரூ.150 கோடிக்கு 'டெண்டர்'
UPDATED : செப் 12, 2025 08:05 AM
ADDED : செப் 11, 2025 10:56 PM

சென்னை : சென்னையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் துாய்மை பணியாளர்களால் ஏற்பட்ட அதிருப்தியை தவிர்க்கும் வகையில், மூன்று வேளை துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் என, மூன்றாண்டுக்கு 150 கோடி ரூபாய்க்கான டெண்டரை மாநகராட்சி கோரியுள்ளது.
---
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், ஏற்கனவே 11 மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை தனியாரிடம் மாநகராட்சி ஒப்படைத்தது.
தொடர்ந்து ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஜூன் மாதம், மாநகராட்சி ஒப்புதல் அளித்தது.
அம்மண்டலங்களில், குப்பை கையாளும் பணியில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட ஊழியர் 2,039 பேர் பணியாற்றினர்.
தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தபோது, அவர்களுக்கான பணி வழங்கப்பட்டாலும், ஊதியம் குறைவாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டியதுடன், தனியார் நிறுவனத்திற்கு வழங்கக்கூடாது என, துாய்மை பணியாளர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களை முற்றுகையிட்டு போராடி வந்த துாய்மை பணியாளர்கள், ஆக., 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன் கூடாரம் அமைத்து, தொடர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, பொது இடத்தில் போராட்டம் நடத்துவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, துாய்மை பணியாளர்கள் நள்ளிரவில் வலுக்கட்டயமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை போக்கும் வகையில், துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு, பணியின்போது உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம், சுய தொழில் துவங்க 3.5 லட்சம் ரூபாய் வரை மானியம் உள்ளிட்ட ஆறு அறிவிப்புகளை, தமிழக அரசு அறிவித்தது.
இதன்பின், துாய்மை பணியாளர்கள் அனைவரும், அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உழைப்போர் உரிமை இயக்கம் மற்றும் செங்கொடி சங்கங்கள், இதில் பங்கேற்கவில்லை.
மே தின பூங்கா, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் திடீர் போராட்டங்களை துாய்மைப் பணியாளர்கள் நடத்தி வருகின்றனர். அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தும் போலீசார், மாலையில் விடுவிக்கின்றனர். தொடர்ந்து, துாய்மை பணியாளர்களின் நடவடிக்கையை போலீசார் கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில், துாய்மை பணியாளர்களை உற்சாகப்படுத்த, மூன்று வேளை உணவு வழங்கும் வகையில், 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்காக டெண்டரை மாநகராட்சி கோரியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆக., மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் என, மூன்று ஆண்டுகளுக்கு, 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. மூன்று ஷிப்டுகளாக பணிக்கு வரும் துாய்மை பணியாளர்களுக்காக, காலை, மதியம், இரவு என, உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினசரி, 17,000க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பயன்பெறுவர். இம்மாத இறுதிக்குள் டெண்டர் இறுதி செய்யப்பட்டு, இத்திட்டம் துவங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.