மக்கள் வீதியில் இறங்கும் நிலை வரும்: சொல்கிறார் அகிலேஷ் யாதவ்
மக்கள் வீதியில் இறங்கும் நிலை வரும்: சொல்கிறார் அகிலேஷ் யாதவ்
ADDED : செப் 12, 2025 10:22 PM

புதுடில்லி: ஓட்டுத் திருட்டை தடுக்காவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.
மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஆளும் பாஜ ஓட்டுத் திருட்டில் ஈடுபட்டு தான் தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், உபி மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ், பாஜ மீது மீண்டும் அதே குற்றச்சாட்டை முன் வைத்ததுடன், ஓட்டுத் திருட்டை தடுக்காவிட்டால், நாடு மிகப் பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என, தேர்தல் கமிஷனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அகிலேஷ் யாதவ் கூறியதாவது: நம் நாட்டில் நடக்கும் பல தேர்தல்களில் ஓட்டுத் திருட்டு நடந்துள்ளது. உபி மாநிலம் ராம்பூர், அயோத்யா உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தேர்தல்களில், வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர்.
இன்று சமூக வலைதளங்களின் காலம். இளைஞர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிரான புரட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது.
ஓட்டுத் திருட்டை தடுக்க தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தேர்தல் கமிஷனின் தலையாய கடமை. ஓட்டுத் திருட்டை தடுக்காவிட்டால், இன்று நம் அண்டை நாடுகளில் அரங்கேறும் அவல நிலை நம் நாட்டிலும் நடக்க வாய்ப்புள்ளது.
அங்கு அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டுத் திருட்டை தடுக்காவிட்டால், நம் நாட்டிலும் மக்கள் வீதிகளில் இறங்கும் நிலை வந்துவிடும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.