ஹிமாச்சலில் 'ராகிங்' தொல்லையால் மாணவி பலி நான்கு பேர் மீது வழக்கு
ஹிமாச்சலில் 'ராகிங்' தொல்லையால் மாணவி பலி நான்கு பேர் மீது வழக்கு
ADDED : ஜன 03, 2026 03:08 AM
தரம்சாலா: ஹிமாச்சலில் உள்ள அரசு கல்லுாரியில் படித்த 19 வயது மாணவி, 'ராகிங்' மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக கல்லுாரி பேராசிரியர் மற்றும் மூன்று மாணவியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசத்தின் தரம்சாலாவில் உள்ள அரசு கல்லுாரியில், 19 வயது மாணவி படித்து வந்தார்.
அதே கல்லுாரியில் படிக்கும் மூன்று சீனியர் மாணவியர், இந்த மாணவியிடம் கடந்த ஆண்டு செப்டம்பரில் 'ராகிங்'கில் ஈடுபட்டனர். அப்போது மாணவியை தாக்கியதுடன், மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், அந்த கல்லுாரி பேராசிரியர் அசோக் குமார் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட அம்மாணவியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.
இதையடுத்து, ஹிமாச்சலில் உள்ள பல மருத்துவமனைகளிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின் பஞ்சாபின் லுாதியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி சிகிச்சை பலனின்றி அம்மாணவி உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, தன் மகளின் இறப்பிற்கு காரணமான மூன்று மாணவியர் மற்றும் பேராசிரியர் அசோக் குமார் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

