வங்கி கணக்கு எண் பொருந்தாததால் ஜி.எஸ்.டி.,யை முடக்குவதற்கு எதிர்ப்பு
வங்கி கணக்கு எண் பொருந்தாததால் ஜி.எஸ்.டி.,யை முடக்குவதற்கு எதிர்ப்பு
ADDED : செப் 20, 2025 12:29 AM

சென்னை:வங்கி கணக்கு எண் ஒத்துப் போகாததால், ஜி.எஸ்.டி., கணக்கு முடக்கம் செய்யப்படுவதற்கு, தொழில்முனைவோரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் கூறியதாவது:
வங்கியில் வைத்திருந்த நடப்பு கணக்கை வேறு வங்கிக்கு மாற்றம் செய்த விபரங்கள் வங்கிகள் வாயிலாகவே ஜி.எஸ்.டி., போர்ட்டலில், நிறுவனத்தின் விபரங்களில் தானாகவே மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் அந்த விபரங்கள், 'அப்டேட்' செய்யப்படவில்லை.
அதனால், ஜி.எஸ்.டி., கணக்குடன், வங்கி கணக்கு எண் ஒத்துப்போகவில்லை என்ற காரணத்தை, பல சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஜி.எஸ்.டி., கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த விபரம், ஜி.எஸ்.டி., போர்ட்டலில் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு, போர்ட்டலில் உள்ள கணக்கிற்கு நோட்டீஸ் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.
பல நிறுவனங்களும் ஜி.எஸ்.டி., தாக்கல் செய்யும் போது தான் போர்டலை பார்க்கின்றன. திடீரென, ஜி.எஸ்.டி., கணக்கை முடக்கம் செய்வதால் ஜி.எஸ்.டி., தாக்கல் செய்ய முடிவதில்லை. 'இ--வே பில், இன்வாய்ஸ்' செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகின்றன.
எனவே, வங்கி கணக்கு எண் ஒத்து போகாத காரணத்திற்கு ஜி.எஸ்.டி., கணக்கு முடக்குவதை தவிர்த்து, அந்த விபரத்தை மின்னஞ்சல், அஞ்சல் வாயிலாக தொழில்முனைவோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.