பிளாஷ்பேக்: தடைகளை தாண்டி வெள்ளி விழா கொண்டாடிய 'கிழக்கு வாசல்'
இயக்குனர் ஆர்.வி.உதயகுமாருக்கும், நவரச நாயகன் கார்த்திக்கிற்கும் சினிமாவில் நிலையான இடத்தை தந்த படம் 'கிழக்கு வாசல்' 80 மற்றும் 90களில் படங்கள் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் அடங்கிய கேசட் வெளியாகிவிடும். அந்தப் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது, பாடல்கள் மக்கள் மனத்தில் ஆழமாக ஊடுருவிவிடும். படம் பார்க்கும் ஆசையும் வந்து விடும்.
அந்த வகையில் இளையராஜாவின் பாடல்கள் கேசட்டாக வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்று 'கிழக்கு வாசல்' படம் எப்போது வரும் என்று காத்து கிடந்தார்கள். ஆனால் படப்பிடிப்பில் நடந்து கொண்டிருந்தது வேறு.
எம்.எஸ்.மது என்பவர் எழுதிய கதை தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனுக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனை படமாக்க முடிவு செய்து இயக்கும் பொறுப்பை மனோபாலாவிடம் கொடுத்தார். ஆனால் அப்போது மனோபாலா இந்தி படம் இயக்கும் முயற்சியில் இருந்தார். இதனால் ஆர்.வி.உதயகுமார் இயக்குநர் ஆனார்.
படபிடிப்பின்போது பெரும் விபத்து ஏற்பட்டு படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கம் தீப்பிடித்து எரிந்துபோனது. அந்தத் தீ விபத்தைக் கண்ட கதை எழுத்தாளர் எம்.எஸ்.மதுவுக்கு வலிப்பு ஏற்பட்டது. நடிகை சுலக்ஷனாவுக்கு மூக்கிலிருந்து ரத்தம் கசிந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து நடந்த சில நாட்களிலேயே கார் விபத்து ஒன்றில் சிக்கிய உதயகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதம் கோமா நிலையில் இருந்தார். அதனால் இன்னொரு இயக்குனரை கொண்டு படத்தை முடிக்க திட்டமிட்டார் தயாரிப்பாளர். ஆனால் ஆர்.வி.உதயகுமாரின் உதவியாளர்கள் ஒரு மாதம் காத்திருங்கள் அவர் திரும்பி வந்து இயக்குவார் என்றார்கள். சொன்னது போலவே ஒரு மாத்திற்கு பிறகு நினைவு திரும்பி ஆர்.வி.உதயகுமார் படத்தை முடித்தார்.
ஆனால் இது எதுவுமே தெரியாத ரசிகர்கள் படத்தை கொண்டாடி வெள்ளி விழா படமாக்கினார்கள். இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்தது. 'தாங்கிடத்தத்த, தரிகிடதத்த என்று தொடங்கும் வீட்டுக்கு வீட்டுக்கு...', 'தளுக்கி தளுக்கி வந்து...', 'பாடிப் பறந்த கிளி...' 'வந்ததே ஓ...', 'பச்ச மல பூவு...' என ஒவ்வொரு பாடலிலும் கிராமிய மனமும், கர்நாடக இசையும் கைகோர்த்து தாலாட்டியது.
படத்தில் கார்த்திக், ரேவதியுடன், குஷ்பு, விஜயகுமார், ஜனகராஜ், மனோரமா, சின்னிஜெயந்த், சண்முகசுந்தரம், தியாகு ஆகியோர் நடித்திருந்தார்கள்.