இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் பல மறக்க முடியாத காலத்தால் அழிக்க முடியாத படங்களை தந்துள்ளார். ஆனால், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த சில வருடங்களாக வெளிவந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு, ஜோஷ்வா இமைப்போல் காக்க' ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. மேலும், கடன் பிரச்னையால் 'துருவ நட்சத்திரம்' படம் இன்னும் திரைக்கு வராமல் தேங்கி நிற்கிறது.
இதனால் இந்த கடனை அடைக்க கடந்த சில ஆண்டுகளாக கவுதம் வாசுதேவ் மேனன் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு கவுதம் வாசுதேவ் மேனன் புதிய படத்தை இயக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக 'டபுள் ஆக்குபன்சி' படத்தில் நடித்த சந்தோஷ் என்பவர் நடிக்கின்றார். தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது என்கிறார்கள்.