'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது
கதிர் நாயகனாகவும், திவ்ய பாரதி நாயகியாகவும் நடித்துள்ள 'லிங்கம்' என்ற வெப் தொடர் வருகிற 26ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இதனை லக்ஷ்மி சரவணகுமார் எழுதி, இயக்கி இருக்கிறார்.
கதையின் நாயகனான கதிருக்கு போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது ஆசை. இதற்காக கபடி விளையாடி அந்த கோட்டாவில பணியில் சேர முயற்சிக்கிறார். ஆனால் அவரை தடுக்கிறது ஒரு சக்தி. அந்த சக்தியை அழிக்க தாதாவாக மாறுவதுதான் தொடரின் கதை.
இந்த தொடர் கன்னியாகுமரியை ஒரு காலத்தில் கலக்கிய லிங்கம் என்ற தாதாவின் வாழ்க்கை கதை என்று கூறப்படுகிறது. கன்னியாகுமரி அருகே நாச்சிச்யார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிங்கம். பிரபல ரவுடியான இவருக்கும், மற்றொரு தரப்பு ரவுடியான பிரபு என்பவருக்கும் இடையே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருதரப்பை சேர்ந்த சிலர் அடுத்தடுத்துத் கொல்லப்பட்டனர்.
1996 ம் ஆண்டு லிங்கம் இருந்த சிறைக்குள் ஒரு கும்பல் புகுந்து அவரை கொடூரமாக கொன்றது. அவருடைய தலையை துண்டித்து நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலைய பகுதியில் வைத்துத் விட்டு தப்பினர். சிறைக்குள் புகுந்து தலை துண்டிக்கப்பட்டு ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.