முருக பக்தி பாடலை வெளியிட்ட இரண்டு முருகன் பெயர் கொண்டவர்கள்
முன்னணி நடிகர்கள் பக்தி படங்களில் நடிப்பது, முன்னணி நிறுவனங்கள் ஆன்மிக படைப்புகளை உருவாக்குவது அந்த காலம். கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் அந்தவகை படங்கள், பாடல்கள் வந்தது குறைவு. இந்நிலையில், சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் முதல் சுயாதீன ஆன்மிக இசைப் பாடலாக 'வேலும் மயிலும்' என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் பாடலை எழுத, தாய் கிழவி இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து இந்த ஆல்பத்தை வீடியோ வடிவில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து சிவகார்த்திகேயன் புர டக ஷன்ஸ் கூறுகையில் ''தமிழர்களின் ஆன்மிக பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள 'வேலும் மயிலும்' பாடல், முருகப் பெருமானின் அருள் மற்றும் தெய்வீக மகத்துவத்தை இசையின் வழியாக வெளிப்படுத்துகிறது. ஆழமான வரிகளும், நாட்டுப்புற இசை நுணுக்கங்களும், நவீன இசை வடிவங்களும் கலந்த இந்தப் பாடல், பக்தர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.
இந்தப் பாடலின் ஆன்மிக சாரம் பாடலில் மட்டுமல்லாமல், அதை உருவாக்கியவர்களின் பெயர்களிலும் இருக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன், இயக்குனர் சிவகுமார் முருகேசன் ஆகியோரின் பெயர்கள் முருகப் பெருமானோடு தொடர்புடையவை. அவர்களின் ஆழமான பக்தியும் உணர்வுப்பூர்வமான ஈடுபாடும் இந்த இசைப் படைப்பிற்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது.
இந்தப் பாடலோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மேலும் பல தனித்துவமான மற்றும் மனதை வருடும் சுயாதீன இசைப் படைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. புதிய குரல்கள் மற்றும் திறமையாளர்களுக்கு சிறந்த தளமாக இது இருக்கும் எனவும் உறுதியளிக்கிறது.' என்று தெரிவித்துள்ளது.