எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம்
தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்றுவிட்டார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷா, ஜனநாயகன் தயாரிப்பாளர் கே.வி.நாராயணன், தயாரிப்பாளர்கள் டி.சிவா, அர்ச்சனா, லலித் மற்றும் நடிகர்கள் ஸ்ரீமன், சஞ்சீவ், பாடகர் கிரிஷ், நடிகை சங்கீதா உள்ளிட்டவர்களை பார்க்க முடிந்தது.
ஆனால், விஜயை வைத்து படமெடுத்த முன்னணி தயாரிப்பாளர்கள், பல ஹிட் கொடுத்த இயக்குனர்கள், அவருடன் பல படங்களில் நடித்தவர்களை பார்க்க முடியவில்லை. மேலும் இது போன்ற விழாக்களுக்கு சினிமா சங்கங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படும். ஆனால், இந்தமறை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம், சினிமா தொழிலாளர் சம்மேளமான பெப்சி, நடிகர்கள் சங்கத்துக்கு அழைப்பிதழ் தரப்படவில்லையாம்.
முதல்வருக்கு மிகவும் வேண்டியவர்கள், நண்பர்கள் சிலருக்கு மட்டுமே அழைப்பிதழ் தரப்பட்டுள்ளதாம். இது சங்க நிர்வாகிகள், அவர் வெற்றிக்காக வாழ்த்திய பலரை வருத்தப்பட வைத்துள்ளது. ஆனால், முதல்வர் தரப்போ 'கடைசி நேரத்தில் விழா முடிவானது. ஒரே இரவில் பலருக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத சூழ்நிலை. அதனால், சினிமா சங்கங்களுக்கு அனுப்பவில்லை. விரைவில் அவர்களை கோட்டைக்கு அழைத்து முதல்வர் பேசுவார். அவர்களின் குறைகளை கேட்பார்' என்கிறார்கள்.
அதேசமயம், கருணாநிதி பாணியில் முதல்வருக்கு பாராட்டுவிழா, வெற்றி விழா என சினிமா சங்கங்கள் ஆரம்பித்துவிடக்கூடாது என்பதும் பலரின் கோரிக்கையாக உள்ளது. முதல்வரான விஜய்க்கு நடிகை சிம்ரன், இயக்குனர்கள் வெங்கட்பிரபு, கார்த்திக் சுப்புராஜ், அட்லி, நடிகர் ராகவா லாரன்ஸ், அருண்விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.