உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தேவா அறிமுகமான 'மாட்டுக்கார மன்னாரு'

பிளாஷ்பேக் : தேவா அறிமுகமான 'மாட்டுக்கார மன்னாரு'

பொதுவாகவே இசை அமைப்பாளர் தேவா இசை அமைப்பாளராக அறிமுகமானது 'வைகாசி பொறந்தாச்சு' படம் தான் என்பார்கள். ஆனால் அதற்கு முன்பே அவர் 'மாட்டுக்கார மன்னாரு' என்ற படத்திலேயே அறிமுகமாகி விட்டார். அதற்கு பிறகு மனசுக்கேத்த மகராசா படத்திற்கு இசை அமைத்தார். மூன்றாவதாகத்தான் 'வைகாசி பொறந்தாச்சு' படத்திற்கு இசை அமைத்தார். பிரசாந்த் அறிமுகமான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானதால் தேவா பிரபலமானார். குறிப்பாக சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது அம்மா அம்மாடி, தண்ணிகொடம் எடுத்து... போன்றவை பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடைந்தன.

'மாட்டுக்கார மன்னாரு' படத்தில் சந்திரசேகர் கதை நாயகனாக நடித்திருந்தார். அருந்ததி, அஸ்வினி நாயகிகளாக நடித்திருந்தனர். குமரிமுத்து, செந்தில், பண்டரிபாய், காந்திமதி நடித்திருந்தார்கள். இந்த படத்தில் 6 பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார் தேவா. இவரது பெயரை சி தேவா என குறிப்பிட்டனர்.

'மனசுக்கேத்த மகராசா' படத்தில் ராமராஜன், நாயகனாகவும், சீதா நாயகியாகவும் நடித்திருந்தனர். தீனதயாளன் என்பவர் இயக்கி இருந்தார். இதிலும் 6 பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார் தேவா. இந்த இரு படத்தின் பாடல்களும், வைகாசி பொறந்தாச்சு படத்திற்கு பிறகு கவனிக்கப்பட்டு ரசிக்கப்பட்டது.

முன்னிணி இசை அமைப்பாளரான அனைவரும் முதல் படத்தில் ஹிட் கொடுத்தவர்கள். ஆனால் தேவா 2 படத்தில் தோல்வி அடைந்து 3வது படத்தில் வெற்றி பெற்றவர். தேவாவிற்கும் முதல் படம் வெற்றிப் படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல் இரண்டு படம் பற்றி பெரிதாக பேசிக் கொள்வதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !