
சக்தி தலங்களில் மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி விசேஷமானவை. ஒரே நாளில் மூன்று தேவியரையும் தரிசிக்கும் விதத்தில் பெங்களூரு சிவாஜி நகரில் மூன்று கோயில்கள் உள்ளன. கிரகதோஷம் தீர தொடர்ந்து மூன்று பவுர்ணமியன்று இவர்களை தரிசிக்கின்றனர்.
செல்வந்தரான கோவிந்த செட்டியார் என்ற பக்தர் 1872ல் சிவாஜி நகர் திம்மையா சாலையில் விஸ்வநாதர் கோயிலைக் கட்டினார். மைசூரு மகாராஜாவால் ராய்பகதுார் பட்டம் பெற்றவர் இவர். முன்பு வெளியூர் செல்லும் வியாபாரிகள் தங்குவதற்காக இங்கு சத்திரம் கட்டி, அன்னதானம் அளித்து வந்தார். கோயில் கட்டிய பிறகும் அன்னதானம் தொடர்ந்தது.
காசியில் இருந்து மாட்டு வண்டியில் எடுத்து வரப்பட்ட சிவலிங்கம் கருவறையில் கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது. முகப்பில் கட்ட கோபுரத்துடன் உள்ள கோயிலின் நுழைவு வாசலில் உள்ள சண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்தியின் சிற்பம் காண்போரை கவர்கிறது. விசாலாட்சியம்மன் தெற்கு நோக்கி அருள்புரிகிறாள்.
பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், சுப்பிரமணியர், சரஸ்வதி, சண்டிகேஸ்வரர், துர்கை, பைரவர் சன்னதிகள் உள்ளன. காரண ஆகம முறைப்படி நான்கு கால பூஜை நடக்கிறது. தலவிருட்சமான வில்வமரம் கோயிலின் முன்புறம், பின்புறம் என இரண்டு உள்ளன.
குழந்தைப்பேறு கிடைக்க ஆடிப்பூரத்தன்று முளை கட்டிய பயறு, வாழைப்பழம், வளையல், மஞ்சள், குங்குமத்தை அம்மனின் மடியில் கட்டி பூஜை நடத்துவர். இதை தம்பதியர் சாப்பிட்டால் அறிவும், அழகும் உள்ள குழந்தைகள் பிறக்கும்.
ஆடி மாதப்பிறப்பன்று அம்மனுக்கு 1008 தாமரைகளால் மூலமந்திர சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கும். கார்த்திகை மாத திங்கள் அன்று 108 சங்காபிஷேகம் நடக்கும். ஆனி அவிட்டத்தன்று நடக்கும் வருடாபிேஷகத்தின் போது சுவாமி, அம்மனுக்கு கனகாபிஷேகம்(தங்க நாணயத்தால் அபிஷேகம்) நடக்கும்.
தம்பதியர் பள்ளியறை பூஜையைத் தரிசித்து பால் பிரசாதம் சாப்பிட்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். ஒரே நாளில் தரிசிக்கும் விதத்தில் அருகிலேயே மீனாட்சி, காமாட்சியம்மன் கோயில்கள் உள்ளன. இதை திங்கள்தோறும், பவுர்ணமி அன்றும் தரிசிப்பது சிறப்பு.
எப்படி செல்வது: ஓசூரில் இருந்து 42 கி.மீ., பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகிலுள்ள திம்மையா சாலையில் கோயில் உள்ளது.
விசேஷ நாள்: சித்ராபவுர்ணமி, ஆனி அவிட்டம் சொர்ணாபிஷேகம், நடராஜர் ஆறுகால அபிஷேகம், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்.
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 96325 06092
அருகிலுள்ள கோயில்: ஏகாம்பரேஸ்வரர் தர்மராஜா கோயில், மீனாட்சி அம்மன் கோயில் 1 கி.மீ.,
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 080 - 2559 5866