
ஆகஸ்ட் 16: கிருஷ்ண ஜெயந்தி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியன்று பாலுாட்டும் வைபவம் நடக்கிறது. இங்கு வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.
பக்தரான சேர மன்னர் ஒருவருக்கு கிருஷ்ணர் கோயில் கட்டும் எண்ணம் எழுந்தது. ஒருநாள் கனவில் தோன்றிய கிருஷ்ணர், ''புண்ணிய நதியான தாமிரபரணி கரையிலுள்ள புன்னை வனத்தில் கோயில் கட்டு'' என உத்தரவிட்டார். அதன்படி திருப்பணி நடந்த போது பாமா, ருக்மணி சிலைகளை தலைமைச் சிற்பி வடிவமைத்தார். அவரது கனவில் தோன்றி, ''இது போன்ற அழகிய சிலைகளை இதுவரை நான் பார்த்ததில்லை. இங்குள்ள பாமா, ருக்மணியரை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்'' என கிருஷ்ணர் தெரிவித்தார். இங்குள்ள சுவாமி 'நித்ய கல்யாணப் பெருமாள்' எனப்படுகிறார்.
புல்லாங்குழலுடன் இருப்பதால் 'வேணு கோபாலர்' என்றும் பெயருண்டு. கருடசேவை, வைகுண்ட ஏகாதசி விழாக்களில் பாமா, ருக்மணியுடன் சுவாமி எழுந்தருள்கிறார்.
திருமணத் தடை நீங்கவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர் சேரவும் துளசி மாலை சாத்தி நெய் விளக்கு ஏற்றுகின்றனர். சாளக்கிராம கல்லால் ஆனதால் சுவாமிக்கு எண்ணெய்க்காப்பு, பாலாபிஷேகம் மட்டுமே நடக்கிறது.
கிருஷ்ண ஜெயந்தியன்று காலையில் கண்திறப்பு, சங்குப்பால் என்னும் பாலுாட்டும் வைபவம் நடக்கும்.
சுவாமியின் முன் தேங்காயின் மூன்று கண்களை அர்ச்சகர்கள் திறப்பர். இதன் மூலம் குழந்தை கிருஷ்ணரே எழுந்தருளி கண் திறப்பதாக ஐதீகம். பிறகு சங்கில் பாலுாட்டுவது போல பாவனை
செய்து நெல்லை படைத்து வழிபடுவர். நாடு செழிக்க வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக இதைச் செய்கின்றனர். பின்னர் விவசாயிகளுக்கு நெல் பிரசாதம் வழங்கப்படும். இதை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் விளைச்சல் பெருகும்.
எப்படி செல்வது: அம்பாசமுத்திரம் - ஊர்க்காடு செல்லும் வழியில் கோயில் உள்ளது.
விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, மார்கழி பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதசி.
நேரம்: காலை 8:00 - 10:30 மணி; மாலை 5:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 04634 - 251445
அருகிலுள்ள கோயில்: பாபநாசம் பாபநாசநாதர் கோயில் 9 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:30 - 1:00 மணி; மாலை 5:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 04634 - 223 268