மலேஷிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நிதி மோசடி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு
மலேஷிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நிதி மோசடி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு
ADDED : டிச 26, 2025 09:21 PM

கோலாலம்பூர்: மலேஷிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், '1 எம்.டி.பி.,' நிறுவன ஊழல் வழக்கில் குற்றவாளி என, அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், 2009 - 2018 வரை பிரதமராக இருந்தவர் நஜிப் ரசாக், 72. இவர், தன் பதவி காலத்தில், 1 எம்.டி.பி., எனப்படும், 'ஒரே மலேஷிய மேம்பாட்டு நிறுவனம்' என்ற அரசு நிறுவனத்தை துவக்கினார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, மலேஷியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
ஆனால், இந்நிறுவனத்தின் நிதியில் இருந்து, 4,900 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை தன் தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு ரசாக் மாற்றியதாக புகார் எழுந்தது. அவர் மீது அதிகார துஷ்பிரயோகம், பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், நஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே, 1 எம்.டி.பி., நிறுவனத்தின் துணை நிறுவனமான, எஸ்.ஆர்.சி., இன்டர்நேஷனலில் இருந்து, 75 கோடி ரூபாயை தன் சொந்த வங்கி கணக்கிற்கு சட்ட விரோதமாக மாற்றிய வழக்கில், 2020ல் நஜிப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், அவரது தண்டனை காலம் ஆறு ஆண்டுகளாக குறைந்தது. வரும் 2028ல் அவர் விடுதலையாக இருந்த நிலையில், தற்போது 1 எம்.டி.பி., நிறுவன வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான தண்டனை விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

