UPDATED : செப் 10, 2025 10:04 PM
ADDED : செப் 10, 2025 09:30 PM

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் டி-20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடந்த ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. 'டி-20' உலக சாம்பியனான இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது. ஆனால், இந்திய அணியின் குல்தீப் யாதவ் மற்றும் ஷிவம் துபேயின் பந்துவீச்சை அந்த அணியால் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தன.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் அலிஷன் ஷரபு அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்டானார். கேப்டன் முகமது வசீம் 19 ரன்களில் குல்தீப் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
முகமது ஜோயிப், ஆசிப் கான், ஹர்ஷித் கவுசிக் ஆகியோர் தலா 2 ரன்னிலும், ராகுல் சோப்ரா 3 ரன்னிலும், துருவ் பரசர், சிம்ரன்ஜீத் சிங், ஹய்தர் அலி தலா ஒரு ரன் எடுத்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 13.1 ஓவரில் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, ஷிவம் துபே3, பும்ரா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அபாரம்
இதன் பிறகு, இந்திய அணி 58 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் ஆட்டத்தை துவக்கியது.
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிசேக் சர்மா , சுப்மன் கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சர்மா 30 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 4.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சுப்மன் கில் 20, சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.