உலக ஒற்றுமை ஆன்மிக கலாசார மாநாடு: திருவண்ணாமலையில் கோலாகலம்
உலக ஒற்றுமை ஆன்மிக கலாசார மாநாடு: திருவண்ணாமலையில் கோலாகலம்
UPDATED : செப் 14, 2025 02:54 AM
ADDED : செப் 14, 2025 02:52 AM

திருவண்ணாமலை: உலக ஒற்றுமை ஆன்மிக கலாசார தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் நேற்று நடந்த ஆன்மிக கலாசார ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அரசு கலைக்கல்லுாரி அருகில், வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு, நேற்று முன்தினம் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை, 1,008, சிவாச்சாரியார்கள், அண்ணா மலையார் மலையை நோக்கி அமர்ந்து, சிவ பூஜை செய்தனர்.
இதை காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வேத மந்திரங்கள் முழங்கி துவக்கி வைத்தார்.
முன்னதாக மாநாட்டு வளாகத்தில் கோ பூஜை நடந்தது. இதில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். இந்த சிவபூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதி ஆலயங்களில் இருந்து வந்த சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.
சிவ பூஜையை தொடர்ந்து, உலக ஒற்றுமை ஆன்மிக கலாசார தினத்தை முன்னிட்டு நேற்று மாலை, 3:00 மணியளவில், திருவண்ணாமலை அண்ணா நுழைவாயிலில் இருந்து ஆன்மிக கலாசார ஊர்வலம் தொடங்கி, கிரிவலப்பாதை சந்தை மேடு மைதானத்திலுள்ள மாநாட்டு திடலை அடைந்தது.
தொடர்ந்து, மாநாட்டு திடலில், மகான்களின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
இன்று காலை, அனைத்து சமூக மக்களும் கலந்து கொள்ளும், 1,008 திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது.
மாநாட்டில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பேசியதாவது:
நாட்டை பாதுகாப்பதற்கு, இறைவன் அருள் தேவை. அவன் அருள் நமக்கு கவசமாக
இருந்து காப்பாற்ற வேண்டும். அதற்கு, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு,
அனைத்து கவசத்தையும் படித்து, பயன்பெற வேண்டும்.
ஆன்மிகத்தை
தமிழகம் முழுதும் பரப்ப, இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். ஜனா
கர்சனம், தனா கர்சனம் என்று, ஆதி சங்கரர் அந்த காலத்திலே எந்திரங்களை
ஸ்தாபித்தார்.
அது போன்று, தர்மத்தின் மீது ஆவாஹர்சனம் உருவாக்ககூடிய நல்லதொரு முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இதுபோன்ற நிகழ்ச்சியை மாவட்டந்தோறும் நடத்தி, ஒவ்வொரு கிராமத்தோடும், நம்
ஆன்மிகத்தை, நாம் இணைத்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்க, முயற்சிக்க
வேண்டும்.
அதுபோன்ற எண்ணத்தை இந்த வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு உருவாக்கி இருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தில், அர்ச்சகர்கள், புரோகிதர்கள், வேத பண்டிதர்கள்,
அவரது குடும்பத்தில் நடக்கும் திருமணங்களுக்கு, அரசு மூலமாக, உதவும் ஒரு
திட்டம் உள்ளது.
பல யுகங்களாக ஹிந்து சனாதன தர்மம் வந்து
கொண்டிருக்கிறது . பிறப்பு எப்போது தொடங்கியதோ, அதிலிருந்து ஹிந்து சமயம்
வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.