கூகுளிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிடக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கூகுளிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிடக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : செப் 20, 2025 11:38 AM

சென்னை: ''எதுவாக இருந்தாலும் கூகுள், ஏஐ.,யிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிட கூடாது. தொழில்நுட்பத்திற்கு, மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்த்த வேண்டும்'' என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆசிரியர்கள் பணிக்கு வந்து இருக்க கூடிய 2 ஆயிரத்து 715 பேரையும் தமிழக முதல்வராக, தமிழக பெற்றோர் சார்பாக வரவேற்கிறேன். என்னை பொறுத்தவரை முதல்வர் என்பதால் சில ஆலோசனைகளை சொல்கிறேன்.
அனுபவம்
ஆசிரியர் என்பவர் பாடப்புத்தக பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல; அனுபவத்தை எடுத்துரைத்து மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு முறை நீங்கள் வகுப்பறைக்குள் நுழையும் போது நினைவில் கொள்ள வேண்டியது, உங்கள் முன்னாடி உட்கார்ந்து இருப்பவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய மாணவர்கள் மட்டுமல்ல, எதிர்கால டாக்டர்கள், இன்ஜினியர்கள், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிற அரசியல் தலைவர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
தூண்கள்
நாட்டின் எதிர்கால தூண்களுக்கு நாம் சொல்லி கொடுக்க போகிறோம் என்ற பொறுப்புணர்வு தான் உங்க கிட்ட மேலோங்கி இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் மாணவர்கள் இருந்து கல்வியை கற்று சமூகத்தை உள்வாங்கி பெற்று இருக்கும் அனுபவத்தை அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கற்று கொடுத்து ஒளியேற்றி வைக்க போகிறீர்கள். இன்றைக்கு இருக்கும் நாம் காலக்கட்டத்தில் பாடம் எடுப்பது எளிதாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.
கூகுள், ஏஐ.,
அறிவியல், வரலாறு, கணிதம் தொடங்கி எந்த பாடம் ஆக இருந்தாலும் அதனுடைய ஆழத்தை எளிதாக கற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புகள் உருவாகிவிட்டது. இதில் ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சரியான பாதையை காட்டி கொடுக்க வேண்டும்.
எதுவாக இருந்தாலும் கூகுள், ஏஐ.,யிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிட கூடாது.
தொழில்நுட்பத்திற்கு, மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்த்த வேண்டும்.அறத்தின் வலிமையையும், நேர்மையின் தேவையையும் நீங்கள் தான் மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்.
போர் அடிக்க...!
மாணவர்களுக்கு பாடம் புத்தகங்களை கடந்து இலக்கியங்களை, பொது அறிவு தகவல்களை, சமூக ஒழுக்கத்தை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை, மாற்று எரிசக்திகளின் தேவையை புரிய வைக்க வேண்டும். டீச்சர் போர் அடிக்க வைக்கிறார்கள் என்று அவர்கள் நினைத்துவிட கூடாது. மாணவர்களும், ஆசிரியர்களும் நண்பர்களாக இருக்க வேண்டும். மாணவர்களுக்குள் ஒளிந்து இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டும். நீங்கள் இன்றைக்கு விதைக்க போகிற விதைகள் தான், நாளைக்கு நமது சமூகத்தில் முளைக்க போகிறது.
பக்குவமாக சொல்லுங்கள்
மாணவர்களுக்கு எந்த அளவுக்கு அறிவாற்றல் முக்கியமோ அந்த அளவுக்கு உடல்நலமும், மன நலனும் முக்கியம். மாணவர்களை ரொம்ப பிரஷர் பண்ண கூடாது. நாம் அன்பாக, பக்குவமாக சொன்னால் மாணவர்கள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள்.
மாணவர்களுக்கு ஜாதிய உணர்வு, பாலின பாகுபாடு வராமல் நீங்கள் தான் பார்த்துகொள்ள வேண்டும்.மாணவர்களுக்கு நல்ல ரோல் மாடலை அறிமுகம் செய்யுங்கள், நீங்களே நல்ல ரோல் மாடலாக இருங்கள். மாணவர்களிடம் அடிக்கடி மனது விட்டு பேசுங்கள். ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.