மதுரை மாநாட்டில் முதல்வரை 'கலாய்த்து' விஜய் பேச்சு; 'ஜனநாயகனுக்கு' சோதனை வரலாம்
மதுரை மாநாட்டில் முதல்வரை 'கலாய்த்து' விஜய் பேச்சு; 'ஜனநாயகனுக்கு' சோதனை வரலாம்
ADDED : ஆக 24, 2025 06:07 AM

மதுரை: மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை, த.வெ.க., தலைவர் விஜய், 'அங்கிள்' என வார்த்தைக்கு வார்த்தை கூறி கிண்டல் செய்து பேசினார். அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்திலும் ஆளுங்கட்சியை தாக்கி பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது என தகவல் வெளியாகி இருக்கும் சூழ்நிலையில், படத்தை வெளியிட வினியோகஸ்தரர்கள், திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் பரவி உள்ளது.
சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து, கடந்த 1993 முதல் செயல்பட்ட நற்பணி இயக்கத்தை 2 ஆண்டுகளுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சியாக விஜய் மாற்றினார். 'கடைசி படமாக ஜனநாயகன் இருக்கும். அதன்பின் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன்' எனவும் அறிக்கை வெளியிட்டார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். தன் கட்சி தலைமையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அறிவித்தார். ஆனால் இதுவரை எந்த ஒரு கட்சியும் அவருடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை.
இச்சூழலில் ஆக., 21ல் மதுரை பாரபத்தியில் 2வது மாநில மாநாட்டை நடத்தினார். அதில் பேசிய விஜய், தி.மு.க., அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல்வர் ஸ்டாலினை வார்த்தைக்கு வார்த்தை 'அங்கிள், வாட் அங்கிள், ராங் அங்கிள்' எனக்கூறி 'கலாய்த்தார்'. இதற்கு பதிலடி தந்து விஜயை வளர்த்துவிட வேண்டாம் என தி.மு.க., அமைதி காத்து வருகிறது.
வெளியாவதில் சிக்கல் விஜயின் கடைசி படமான ஜனநாயகன், வரும் 2026 ஜன., 9ல் வெளியாக உள்ளது. படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பட 'புரமோஷன்' போஸ்டரில் தொண்டர்கள் பின்னணியில் விஜய் நிற்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியாவதால், அதில் தி.மு.க., அரசுக்கு எதிராக விஜய் 'பஞ்ச்' டயலாக் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல்வரையும், துணை முதல்வர் உதயநிதியையும் தாக்கி வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், படப்பிடிப்பில் இருப்போர் கூறுகின்றனர்.
இதனால், படம் வெளியாகும்போது, தி.மு.க., தரப்பால் படத்துக்கு சிக்கல்கள் ஏற்படுக்கூடும் என, சினிமா வினியோகஸ்தரர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கருதுகின்றனர். இதனால் படத்தை வெளியிட்டால் 2013ல் 'தலைவா' படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல், இப்படத்திற்கும் ஏற்படும் எனக் கருதி ஜனநாயகன் படத்தை வாங்கலாமா, திரையிடலாமா என்பதில் ஆழ்ந்த யோசனையில் உள்ளனர். சொல்லப்போனால், எல்லோருக்கும் தயக்கம் ஏற்பட்டிருக்கிறது.
'தலைவா'வுக்கு வந்த சோதனை அவர்கள் கூறியதாவது:
கடந்த 2013ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது, விஜயின் 'தலைவா' படம் வெளியாக நாள் குறிக்கப்பட்டது. படத்தின் தலைப்புக்கு கீழே 'டைம் டு லீடு' என எழுதி இருந்தனர். இது ஜெயலலிதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால், அப்படத்தை வெளியிட அரசு தரப்பில் அனுமதி கொடுக்கவில்லை. படத்தை, தியேட்டர் உரிமையாளர்கள் சொந்த பாதுகாப்பில் வெளியிட்டுக் கொள்ளலாம். தியேட்டரில் ஏதும் பிரச்னை ஏற்பட்டால், தமிழக அரசு பொறுப்பேற்காது என்றும் வெளிப்படையாக கூறினர். மேலும் சில வகைகளில் படத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, அப்போது கோடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவை விஜய், மற்றும் படத்தின் இயக்குநர் ஆகியோர் சந்திக்கச் சென்றனர்.
அப்பாயின்மென்ட் இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது என சொல்லி, ஜெயலலிதா திருப்பி அனுப்பி விட்டார். படத்தலைப்புக்கு கீழே இருந்த வாசகம் நீக்கப்பட்டு விட, படத்தை வெளியிட அனுமதித்தார் ஜெயலலிதா. இந்த குழப்பத்தில், படம் சரியாக ஓடவில்லை.
அதுபோல் ஜனநாயகன்' படத்திற்கும் சிக்கல் ஏற்படுமோ என, தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் அஞ்சுகின்றனர். சென்சாரிலும் படத்துக்கு சிக்கல்கள் வரலாம் என்பதால், படத்தை வாங்குவதா, வேண்டாமா என தியேட்டர் உரிமையாளர்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.