திருச்செந்துார் முருகனுக்கு அரோகரா., கும்பாபிஷேகம் காண கடலாக விரிந்த பக்தர்கள்
திருச்செந்துார் முருகனுக்கு அரோகரா., கும்பாபிஷேகம் காண கடலாக விரிந்த பக்தர்கள்
UPDATED : ஜூலை 07, 2025 03:47 PM
ADDED : ஜூலை 07, 2025 06:36 AM

திருச்செந்துார் : முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்துாரில் இன்று (ஜூலை 7) காலை 6 30 மணியளவில் மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்தனர்.
முன்னதாக கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோவிலில் ஜூலை 1ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோமகுண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.
திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பெருமாளுக்கு தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து, பட்டாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று (ஜூலை 7) அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடைபெறுகின்றன. பின்னர், யாகசாலையில் இருந்து கும்பங்கள் கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இன்று காலை 6 30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு ஆராதனை நடந்த பின் அவற்றின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது
அதே நேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கும்பாபிஷே க நிகழ்வை கண்டு களிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவை கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டி கடற்கரையிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். விழாவில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. கோவில் வளாகத்தில் 6,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் இணையதள டி.வி.,யில் நேரடி ஒளிபரப்பு
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் விழா தினமலர் இணையத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பல் கோவில்களில் கும்பாபிஷேகம்
திருவெண்காடு
மயிலாடுதுறை; சீர்காழி, திருவெண்காடு, பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோவிலில் மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் ஆகியன மூன்றாக அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று ஏழாம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி அனுசு நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் சிற்பபாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர் தேவாரம், வேத பாராயணம் நடந்தன.
வல்லக்கோட்டை முருகன்
காஞ்சிபுரம்; வல்லக்கோட்டை முருகன் கோயிலில், சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றதாகும். பகீரதன், இந்திரன், துர்வாசமுனிவர், அருணகிரிநாதசுவாமிகள் ஆகியோர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
யோக நரசிம்ம சுவாமி
சோளிங்கர்; சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் 57 ஆண்டுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு எதிரே உள்ள சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார். யோக நரசிம்மரை வழிபடும் பக்தர்களின் வேண்டுதலை, யோக அனுமன் நிறைவேற்றுவதாக ஐதீகம். இக்கோவிலில் இன்று 7ம் தேதி காலை 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
குன்றத்துார் கந்தழீஸ்வரர்
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. குன்றத்துார் முருகன் கோவில் மலை அடிவாரத்தில், பழமை வாய்ந்த கந்தழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து, இன்று காலை வேத மந்திரம் முழுங்க மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.