ஓய்வூதிய திட்டங்கள் ஆராயும் குழு முதல்வரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு!
ஓய்வூதிய திட்டங்கள் ஆராயும் குழு முதல்வரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு!
ADDED : டிச 30, 2025 09:00 PM

சென்னை: ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராயும் குழுவினர், முதல்வர் ஸ்டாலினிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
தமிழகத்தில், 2003ம் ஆண்டுக்கு பின், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அதை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, அமைச்சர்கள் குழு நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில், 95 சதவீத சங்கங்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தின. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் எது சிறந்தது என்பதை அறிய, தமிழக அரசு முடிவு செய்தது.
இதுகுறித்து ஆராய்வதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை துணை செயலர் பிரக்திக் தயாள் உள்ளிட்டோர் அடங்கிய குழு, பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இக்குழுவினர், அக்டோபரில் இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜனவரி 6ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட, பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இறுதி அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தனர்.
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் அடுத்த 10 நாட்களுக்குள் முடிவெடுத்து, முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என, நிதித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

