பரமக்குடி அருகே அரசு பஸ்கள் மோதி விபத்து: 20 பயணிகள் காயம்
பரமக்குடி அருகே அரசு பஸ்கள் மோதி விபத்து: 20 பயணிகள் காயம்
ADDED : செப் 12, 2025 05:07 PM

பரமக்குடி;ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நின்ற அரசு டவுன் பஸ் மீது, ராமநாதபுரம் சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
பரமக்குடி அருகே மதுரை நான்கு வழி சாலையில் பார்த்திபனூரில் இருந்து, பரமக்குடி நோக்கி 27ம் எண் அரசு டவுன் பஸ் வந்தது. அப்போது திருவரங்கி பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் கிளம்ப தயாரானது.
தொடர்ந்து பின்னால் மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி அரசு பஸ் வேகமாக வந்துள்ளது. அதன் டிரைவர் கவனக்குறைவாக டவுன் பஸ் பின்னால் மோதி, சென்டர் மீடியனில் நிலை தடுமாறி நின்றது.
இதனால் மதுரை, ராமநாதபுரம் பஸ் முன்பகுதியில் முற்றிலும் சேதமடைந்தது. இதில் இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த 20 பயணிகள் ரத்த காயங்களுடன் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பார்த்திபனூர் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.