100 நாள் வேலை திட்ட பெயரை மாற்ற பழனிசாமி எதிர்ப்பு
100 நாள் வேலை திட்ட பெயரை மாற்ற பழனிசாமி எதிர்ப்பு
ADDED : டிச 18, 2025 06:20 AM

சென்னை: 'தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றாமல் தொடர வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, இன்றைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஊரக வேலை உறுதி திட்டம், 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும், ஊதியமும் உயர்த்தப்படும்' என, வாக்குறுதி அளித்தார். தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
மக்களை ஏமாற்றி, ஓட்டுகளை பெற்று, ஆட்சிக்கு வந்தபின், கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை. அவர் பதிவிட்டு இருந்த நீண்ட அறிக்கையில், ஏன் இதை பற்றி எந்த குறிப்பும் இல்லை. இது போன்ற பச்சை துரோகத்தை செய்து விட்டு, பச்சை துண்டு குறித்து பேச, அவருக்கு என்ன அருகதை இருக்கிறது.
தற்போது, மத்திய அரசு, இந்த 100 நாள் வேலை திட்டத்தை, 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்கிறேன். எனினும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர், எவ்வித மாற்றமுமின்றி தொடர, மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

