ஈ.வெ.ரா.,வை ஆதரிப்பவர்களின் ஓட்டு வேண்டாம்; பொதுக்குழுவில் சீமான் அறிவிப்பு
ஈ.வெ.ரா.,வை ஆதரிப்பவர்களின் ஓட்டு வேண்டாம்; பொதுக்குழுவில் சீமான் அறிவிப்பு
ADDED : டிச 27, 2025 10:26 PM

சென்னை: ''ஈ.வெ.ரா.,வை ஆதரிப்போர் யாரும் எனக்கு ஓட்டு போட வேண்டாம். எத்தனை முன்னோர் நமக்கு பெரியார்கள் என்பதை, ஜன., 3ல் பட்டியலிடுவேன்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை திருவேற்காட்டில், நா.த.க.,வின் மாநில பொதுக்குழு கூட்டம், அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், நடந்தது. அதில், பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் குற்றவாளிகளுக்கு தண்டனை, தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்ற ஆதரவு உட்பட, 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின், பொதுக்குழுவில் சீமான் பேசியதாவது: நா.த.க., முன்னெடுக்கும் அரசியல் கோட்பாட்டை அறிந்து கொள்ளவே, அரை நுாற்றாண்டு ஆகும். எல்லாமே ஈ.வெ.ரா., என்பது, அவர்களது கோட்பாடு. இந்த நாட்டை திருடர் கூடமாக மாற்றி, அதில் மக்களுக்கும், 1,000 ரூபாய் பகிர்ந்தளித்து, திராவிட திருட்டு கூட்டம் செய்து வருகிறது.
இந்த நிலத்தில் இருக்கும் கட்சிகளை ஒழித்து, துாய ஆட்சியை உருவாக்க வேண்டும். தனித்து நின்று அங்கீகாரம் பெற்றோம். கடைசி நேரத்தில் நமக்கு சின்னத்தை ஒதுக்கினர். மக்கள் நம் சின்னத்தை தேடி, 8.22 சதவீதம் என, 36 லட்சம் ஓட்டுகளை அளித்துள்ளனர்.
இவ்வளவு துாரம் நம்மை ஏற்றி விட்டவர்கள், இன்னும் மீதியிருப்பதையும் நமக்கு தருவர்; 2026 தேர்தலில் நம்மை ஆதரிப்பர். 'டிவி', மடிக்கணினி, இலவச அரிசி, மோட்டார் பைக், கார் தருவோம் என, அவர்கள் அறிவித்தால், 'வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருவேன்' என, நான் சொல்வேன்.
இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல; அது வீழ்ச்சி திட்டம்; கவர்ச்சி திட்டம். தேசத்தை நாசமாக்கியது இலவசம் தான். அது, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை. நா.த.க., ஆட்சியில், பஸ் கட்டணம் கிடையாது; சிறந்த கல்வியை வழங்குவோம்.
எல்லாமே ஈ.வெ.ரா., என்பவர்கள் யாரும், எனக்கு ஓட்டு போட வேண்டாம். என் இனத்தின் முன்னோர் ஒவ்வொருவரும் எனக்கு பெரியார் என்பவர்களே ஓட்டு போடுங்கள். எத்தனை பெரியார்கள் உள்ளனர் என, ஜன., 3ம் தேதி சொல்லப் போகிறேன். அன்று, தற்போது அடையாளம் காட்டப்பட்டிருக்கும் பெரியாரை அடக்கம் செய்துவிட்டு தான் வெளியேறுவேன்.
ஊழல், பசி, பட்டினி இல்லாத நாட்டை, அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வோம். நல்ல கல்வி, குடிக்க தண்ணீர், பயணிக்க நல்ல பாதை, நல்ல மருத்துவம், அரசு மருத்துவமனைகளில் தான் அனைவருக்கும் சிகிச்சை, அரசு அதிகாரிகளின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என, சட்டத்தை இயற்ற வேண்டும். அப்படி செய்தால், நல்ல சமூகம் படைக்கப்படும். அதை நோக்கியே என்னுடைய பயணம் இருக்கும்.
நான் அதிகாரத்துக்கு வந்த பின், பாலியல் குற்றம் நடந்தால், குற்றவாளிகளை உடனுக்குடன் கொன்று விடுவேன். நம் ஆட்சியில், 'பார்த்து போ, பெண்களை எதுவும் செய்து விடாதே' என, ஆண் பிள்ளைகளை பெற்றோர் அறிவுறுத்துவர். பெண் பிள்ளைகளுக்கு துப்பாக்கி சுடுதல் முதல் அனைத்து தற்காப்பு கலைகளும் கற்று தருவேன்.
ஹிந்துக்களை பா.ஜ.,வும், சிறுபான்மையினரை தி.மு.க.,வும் அணி திருட்டுகிறது. நாம், தமிழர்களை ஒருங்கிணைக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

