ADDED : ஜூலை 24, 2025 01:28 PM

காஞ்சிபுரம்: திருமணத்தை மீறிய உறவுக்காக 2 குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கில், தாய் அபிராமி மற்றும் காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகிய 2 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய், 30. இவரது மனைவி அபிராமி,25. இருவருக்கும் அஜய், 6 என்ற மகனும், கார்னிகா,4, என்ற மகளும் இருந்தனர்.
அபிராமிக்கும், அதே பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம்,25, என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு, நீண்ட நாட்களாக பழகி வந்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மகன், மகளை அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.
இது தொடர்பாக, அபிராமி, அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்தையும், குன்றத்துார் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா வாதாடி வந்தார்.
விசாரணை முடிந்து, இவ்வழக்கில் இன்று (ஜூலை 24) நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில், தாய் அபிராமி மற்றும் கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரம் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து, தாய் அபிராமி மற்றும் கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில், நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.