அரசு பணிக்கான தேர்வா அரசியல் கட்சிக்கான தேர்வா? டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் அதிருப்தி
அரசு பணிக்கான தேர்வா அரசியல் கட்சிக்கான தேர்வா? டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் அதிருப்தி
ADDED : ஆக 19, 2025 02:16 AM

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், அரசியல் கொள்கை சார்ந்த கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுவதால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 1,033 அரசு பணியிடங்களுக்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பொது அறிவு தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. விண்ணப்பித்தவர்களில், 43,882 பேர் தேர்வு எழுதவில்லை.
இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள், தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கூற்றும் காரணமும் என்ற வகை கேள்விகள் உள்ளன. அதில் ஒரு கூற்றை சொல்லி, அதற்கான காரணம் சரியா என, கேட்கப்படுகிறது.
அந்த வகையில் கேள்வி எண், 133ல், 'அரசு பள்ளிகளில் ஹிந்தி திணிப்பை, தமிழகம் நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. மேலும், எழுச்சி பெறும் இந்தியாவுக்கான பிரதம மந்திரியின் பள்ளிகளில் இணைய மறுத்து விட்டது. எனவே, மத்திய அரசு சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
' இது, கூட்டாட்சி நிர்வாக முறை என்ற கருத்திற்கு எதிரானதாக கருதப்பட்டு, தமிழக அரசால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டு, நான்கு விடைகள் வழங்கப்பட்டுள்ளன.
'இந்த வினா, ஆளும் தி.மு.க., அரசின் கொள்கை சார்ந்தது' என, தேர்வர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
தற்போது, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகளில், தி.மு.க., குறித்தும், அதன் தலைவர்கள் குறித்தும் கேட்கப்படும் கேள்விகள் அதிகம் உள்ளன. தற்போது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ர சிக் ஷா கல்வி நிதி பங்கீடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி, தி.மு.க., அரசின் கொள்கை முடிவு தொடர்பானது.
பொது அறிவு தொடர்பான வினாக்களில், ஓர் அரசியல் கட்சியின் கொள்கை சார்ந்த முடிவுகள் குறித்து கேட்பது, எந்த வகையில் நியாயம்? இதில், பலருக்கு பலவிதமான கருத்துகள் இருக்கும். அவரவருக்கு அவர்களின் கருத்து நியாயமானதாக இருக்கும். இதற்கு எப்படி பதில் அளிக்க முடியும்?
தங்களின் கொள்கைக்கு உட்பட்டு பதில் அளித்தால், தேர்வாணையம் அதை தவறு என சுட்டிக்காட்டும். எனவே, திட்டங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கலாம்; ஆனால், கட்சி, அரசியல் கொள்கை சார்ந்த கேள்விகளை, டி.என்.பி.எஸ்.சி., தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.