ஜிஎஸ்டி சீர்திருத்தம் அல்ல, புரட்சி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஜிஎஸ்டி சீர்திருத்தம் அல்ல, புரட்சி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ADDED : செப் 20, 2025 03:03 PM

கோவில்பட்டி: ஜிஎஸ்டி சீர்திருத்தம் பிரதமர் மோடி கொடுத்த தீபாவளி பரிசு. ஜிஎஸ்டி சீர்திருத்தம் அல்ல, புரட்சி என தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் தீப்பெட்டித் தொழிலில் பெண்களின் பங்களிப்பையும், மத்திய அரசின் திட்டங்களையும், எதிர்கால இலக்குகளையும் குறித்து விரிவாகப் பேசினார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தீப்பெட்டித் தொழிலின் வளர்ச்சிக்கு பெண்களே அச்சாணி. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் கடின உழைப்பை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
சீர்திருத்தம் அல்ல, புரட்சி
இந்தத் தொழில், தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிக்கிறது. தீப்பெட்டி தொழிலின் அச்சாணிகளாக தமிழக பெண்கள் திகழ்வதால், மத்திய அரசின் கடமையே தென் மாவட்டங்களுக்கு உதவுவது தான். 2047ம் ஆண்டிற்குள் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் 375 பொருட்களுக்கு விலை குறைப்பு, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அல்ல, புரட்சி. தீப்பெட்டி தொழிலாளர்கள் நலனுக்காக திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மக்களின் உண்மையான பிரச்சனைகள், பாதிப்புகள் மற்றும் கோரிக்கைகளை நன்கு தெரிந்த ஒருவரையே சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்திய அரசு அண்மையில் 375 பொருட்களுக்கு 10% வரை ஜிஎஸ்டி வரியைக் குறைத்துள்ளது. இந்தக் குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும். இது பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் தீபாவளிப் பரிசு. இந்த வரி குறைப்பு, மக்கள் பொருட்களை வாங்கும்போது பணத்தைச் சேமிக்க உதவும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.