குடும்பத்துக்காக அரசு கேபிள் டிவி முடக்கம்: இபிஎஸ்
குடும்பத்துக்காக அரசு கேபிள் டிவி முடக்கம்: இபிஎஸ்
UPDATED : செப் 12, 2025 09:29 PM
ADDED : செப் 12, 2025 08:39 PM

திருப்பூர்: ''திமுக குடும்பம் கேபிள் டிவி நடத்துகின்ற காரணத்தினால், அவர்கள் அரசு கேபிள் டிவியை முடக்க வேண்டும் என்றே செயல்படுகிறார்கள்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
' மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பி.என்.சாலையில் பேசியதாவது: துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் பிறந்த ஒருவருக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது, தமிழகத்துக்கும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை. அதிமுக ஆட்சியில் திருப்பூர் வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களின் அடிப்படை தேவைகள் எல்லாம் நிறைவேற்றினோம். திமுகவின் 52 மாத ஆட்சியில் ஏதாவது ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்தார்களா? அதிமுக திட்டத்தை திமுக திறந்துவைத்துள்ளது. நம் பிள்ளைக்கு திமுக பெயர் வைக்கிறது.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெடும். அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. ஒரு முதல்வர் என்பவர் மக்களை திருத்தி நல்வழியில் கொண்டுவர வேண்டும். ஆனால் ஸ்டாலினுக்கு மக்கள் எக்கேடு கெட்டாலும் தன் குடும்பம் செழிக்க வேண்டும் என்பதே எண்ணம். அரசு நினைத்தால்தான் போதைப்பொருளை தடுத்து நிறுத்த முடியும். கொங்கு மண்டலத்தில்தான் அதிகமான எண்ணிக்கையில் முதியவர்கள் கொல்லப்பட்டு, கொள்ளையடிக்கப் படுகிறார்கள். அரசு என்பது விழிப்போடு செயல்பட்டு தடுத்திருந்தால் முதியோர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.
அதிமுக ஆட்சியில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி இணைப்பு கொடுத்தோம். இன்று இணைப்புகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. திமுக ஆட்சியில் ஒரு அமைச்சர், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, டி.ஆர்.பி.ராஜாவுக்கு வேண்டப்பட்ட அரிஸ்டோ நிறுவனத்திடம் வாடகைக்கு செட்டாப் பாக்ஸ் வாங்கித்தருகிறார்கள். அதன் வாடகை மிக மிக அதிகம். இதற்குப் பதிலாக புதிய செட்டாப் பாக்ஸ் கொடுத்துவிடலாம். இதிலும் ஊழல் நடக்கிறது. தனியாருக்கு கொடுத்ததால் 300 கோடி ரூபாய் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும்.
திமுக குடும்பம் கேபிள் டிவி நடத்துகின்ற காரணத்தினால், அவர்கள் அரசு கேபிள் டிவியை முடக்க வேண்டும் என்றே செயல்படுகிறார்கள். அதிமுக ஆட்சியில் 30 லட்சம் இணைப்பு இருந்தது. வருமானமும் கிடைத்தது. இன்றைய தினம் 14 லட்சம் இணைப்புகள்தான் இருக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சியில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை வழங்கப்படும்.எல்லாம் பேப்பரில், டிவியில் வரவேண்டும் என்பதற்காகவே இந்த அரசு செயல்படுகிறது.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
தொழிலதிபர்களை சந்திக்காத முதல்வர்
திருப்பூர் மாநகராட்சி அருகே இபிஎஸ் பேசியதாவது: ஸ்டாலினுக்கு அதிமுக கூட்டணியை பார்த்து பயம் வந்துவிட்டது. திமுக கூட்டணி பலம் வாய்ந்தது என்று வெளியில் பேசுகிறார், உள்ளே பயத்தில் இருக்கிறார். ஐந்து முறை முதல்வர் வெளிநாட்டுக்குச் சென்று எவ்வளவு முதலீடு ஈர்த்திருக்கிறார்? எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளது. வெளிநாடு போய் உல்லாசமாக இருந்தார். இருக்கிற தொழில்களும் நலிவடைகிறது. தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. திருப்பூர் என்றால் டாலர் சிட்டி என்று பெயர் பெற்றது, தமிழக அரசுக்கு அதிகம் அந்நிய செலாவணி ஈட்டிக்கொடுக்கிறது. இப்போது அமெரிக்க வரி விதிப்பால் பல பிரச்னைகளை திருப்பூர் சந்திக்கிறது. உடனே முதல்வர் தொழிலதிபர்களை சென்னை வரவழைத்து, என்ன பிரச்னை? அரசு மூலம் எப்படி சரிசெய்வது? மத்திய அரசோடு தொடர்புகொண்டு சரிவில் இருந்து மீட்பது எப்படி? என்று செயல்பட்டால்தான் நல்ல முதல்வர்.
இது ஒரு சோதனையான காலகட்டம். இப்படிப்பட்ட நேரத்தில் எம்பிக்கள் உடனடியாக மத்திய அமைச்சர்களை சந்தித்து, பிரதமரை சந்தித்து, திருப்பூரின் 50% தொழில் பாதிப்புக்கு தீர்வு காணவேண்டும், இங்கிருக்கும் தொழிலே நிலைக்கவில்லை. வெளிநாடு சென்று முதலீடு ஈர்ப்பதற்குப் பதிலாக இங்கிருக்கும் தொழிலை கவனிக்க வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து வரும் தொழிலதிபர்களிடம், பல்வேறு சலுகைகளை அளிக்கிறோம் என்று ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். ஆனால், இங்கிருக்கும் முதல்வரை திருப்பூர் தொழிலதிபர்கள் சந்தித்து வரி குறைப்பு நடவடிக்கைக்குக் கோரிக்கை வைக்க முடியவில்லை. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.