அ.தி.மு.க., லெட்டர் பேடில் வெளியாகும் அறிக்கை கமலாலயத்தில் தயாராகிறது: ஸ்டாலின் விளாசல் பழனிசாமியை விளாசிய ஸ்டாலின்
அ.தி.மு.க., லெட்டர் பேடில் வெளியாகும் அறிக்கை கமலாலயத்தில் தயாராகிறது: ஸ்டாலின் விளாசல் பழனிசாமியை விளாசிய ஸ்டாலின்
ADDED : டிச 30, 2025 07:25 AM

திருப்பூர்: ''வரும் தேர்தலில் வெற்றி பெற்று பெண்களுக்கான திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவோம்,'' என, பல்லடத்தில் நேற்று நடந்த தி.மு.க., மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., மேற்கு மண்டல மகளிரணி மாநாடு, 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் காரணம்பேட்டையில் நேற்று நடந்தது.
மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கூடியிருக்கும் பெண்கள் கூட்டத்தை பார்க்கும் போது 'பவர்புல்' ஆக இருக்கிறது. 'உமன் பவரில்', தி.மு.க., மீண்டும் 'பவரு'க்கு வரப் போகிறது என்பது உறுதியாகி விட்டது.
தேர்தல் வந்து விட்டால், தி.மு.க., தேர்தல் அறிக்கை தான், 'ஹீரோ'. அந்த 'ஹீரோ'வை தயாரிக்கும் பொறுப்பை, கனிமொழி ஏற்றிருக்கிறார். கடந்த எம்.பி., தேர்தலில், அவர் தலைமையேற்று தயாரித்த தேர்தல் அறிக்கை முழுமையான வெற்றியை தேடித்தந்தது. வரும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற இருக்கிறோம்.
பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மசோதா நிறைவேற்றிய மத்திய அரசு, அதை அமல்படுத்தாமல், பெயரளவில் வைத்துள்ளது; அது எப்போது அமலுக்கு வரும் என, சொல்ல முடியாது.
'ஆப்பரேஷன் சக்சஸ்; பேஷன்ட் கோமா' என்ற நிலை தான் இது. பெண்களுக்கு பார்லிமென்டில் அதிகாரம் கிடைப்பதை பா.ஜ., விரும்பவில்லை.
தமிழகத்தில், 1.39 கோடி பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது; பஸ்களில் விடியல் பயண திட்டத்தின் கீழ், இதுவரை, 900 கோடி பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், 88 சதவீத பெண்கள் பயனடைந்தனர்; ஆனால், அந்த திட்டத்தை பா.ஜ., அரசு இழுத்து மூடிவிட்டது. திட்டத்தில், 40 நாட்கள் வேலை கிடைக்குமா என்பதே சந்தேகம் தான்.
அதற்கான நிதி சுமையையும் மாநில அரசின் மீது சுமத்தி, பல்வேறு நிபந்தனைகளை, மத்திய அரசு விதித்துள்ளது. இதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முட்டுக் கொடுத்து வருகிறார்.
கமலாலயத்தில் தயாராகும் அறிக்கையை, அ.தி.மு.க., லெட்டர் பேடில் வெளியிட்டு வருகிறார்.
அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று, 'திராவிட மாடல், 2.0' திட்டத்தில் பெண்களுக்கான திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளோம்.
எனவே, பெண்களுக்காக தி.மு.க., அரசு செய்யும் சாதனைகளை வீடு வீடாக கொண்டு சென்று சேர்க்கும் பணியை பெண்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
பெண்களுக்கான ஆட்சி
மாநாட்டில், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசியதாவது:
பெண்களுக்கான ஆட்சியை வழங்கி வரும் முதல்வருக்கு நன்றி சொல்லும் விதமாகவும், அடுத்து வரும் தேர்தலில் அவருக்கு துணையாக நிற்போம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தான் மகளிர் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. மகளிர் அணியினர் சார்பில், இந்திய அரசமைப்பு சட்டத்தின் நகலை புத்தக வடிவில் முதல்வருக்கு பரிசாக வழங்கியிருக்கிறோம். இந்த நாட்டின் எதிர்காலத்தை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளோம் என்பதே அதன் அர்த்தம்.இந்திய அரசியலமைப்பு சட்டம் தரக்கூடிய நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை காப்பாற்றக்கூடிய ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் என்ற நம்பிக்கையை, இந்த நாடு வைத்திருக்கிறது. இந்த நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை, முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கிறது. வரும் தேர்தலை முன்னிட்டு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கையில், மக்களின் கோரிக்கை, தேவைகள் இடம்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

