/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில்... தீர்வு கிடைக்குமா? பின்னலாடை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
/
4ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில்... தீர்வு கிடைக்குமா? பின்னலாடை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
4ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில்... தீர்வு கிடைக்குமா? பின்னலாடை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
4ம் கட்ட சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில்... தீர்வு கிடைக்குமா? பின்னலாடை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 27, 2025 06:18 AM

திருப்பூர்: பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்கள் - தொழிற்சங்கங்களிடையே, சம்பள ஒப்பந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. வரும் ஜன. 19ல் நடைபெற உள்ள நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் பின்னலாடை தொழிலாளர்கள் உள்ளனர்.
திருப்பூரில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கான சம்பள உயர்வு நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
நவ. 20ல் நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில், பொதுவான சம்பள ஒப்பந்த கோரிக்கை தயாரித்து வழங்க தொழிற்சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பின்னலாடை தொழிற்சங்கங்கள் கூடி, 120 சதவீத சம்பள உயர்வு உள்பட பல்வேறு அம்சங்களுடன், பொது கோரிக்கை பட்டியல் தயாரித்தன.
இம்மாதம் 5ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கங்கள் தரப்பினர், கூட்டு கமிட்டியில் முடிவு செய்த பொது கோரிக்கைகளை முன்னிறுத்தி, உற்பத்தியாளர் சங்கத்தினருடன் பேசினர்.
அதன் தொடர்ச்சியாக, தொழிற்சங்கங்களின் பொது கோரிக்கைகள் தொடர்பாக, உற்பத்தியாளர் சங்கங்கள் தனித்தனியே, தங்கள் செயற்குழுவை கூட்டி, ஆலோசனை நடத்தின.
இருதரப்பு கருத்துகள்
இருதரப்பினரிடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நேற்று மாலை நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு வழங்குவதாகவும்; பஞ்சப்படி அதே நிலையிலேயே தொடரலாம் எனவும் உற்பத்தியாளர் சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விலைவாசி உயர்ந்துள்ளதால், இந்த சம்பள உயர்வு போதாது எனவும்; பஞ்சப்படியை உயர்த்த வேண்டும் எனவும், தொழிற் சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, உற்பத்தியாளர் சங்கத்தினர், தங்களுக்குள் கூடி பேசி, முடிவு செய்வதாக தெரிவித்தனர். வரும் ஜன. 15, 16, 17 தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ஜன. 19ம் தேதி, இருதரப்பினரிடையே, நான்காவது கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையுடன், பின்னலாடை தொழிலாளர்கள் உள்ளனர்.
---
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க வளாகத்தில் நேற்று உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் இடையே பின்னலாடை தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை நடந்தது.

