/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு
/
தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு
தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு
தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 23, 2025 07:02 AM

மதுரை: மதுரை புஷ்பவனம் 2020ல் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்திலுள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க, பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொதுக் கணக்கு குழுவின்' 39வது அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின்படி சென்னை, திருச்சியிலுள்ள மத்திய தொல்லியல்துறை (ஏ.எஸ்.ஐ.,) அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தொல்லியல் சின்னங்களை, தொல்லியல்துறை அலுவலர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் அவற்றை பாதுகாக்க தேசிய கொள்கையின்படி திட்டங்களுக்குரிய ஆய்வு அறிக்கை தயாரிக்க வேண்டும். ஆய்வின் போது சேகரித்த குறிப்புகள், போட்டோ ஆதாரங்களின்விபரங்களை வெளியிடவேண்டும்.
தொல்லியல் சின்னம் வளாகத்தில் நவீன கழிப்பறைகள், உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பார்வையிடுவதற்கு ஏற்ற வசதிகள் செய்ய வேண்டும்.
எலக்ட்ரானிக் டேட்டா, படங்களை பயன்படுத்தி வரலாறு, கலாசார சின்னங்களை பாதுகாப்பதற்கான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். துாத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக மத்திய தொல்லியல்துறை அலுவலகம் உருவாக்க வேண்டும்.
துாத்துக்குடி அல்லது தமிழகத்தின் வேறு ஏதேனும் ஒரு மாவட்டத்தில் கடல்சார் தொல்லியல் பணிக்காக சிறப்பு தொல்லியல் பிரிவை உருவாக்கக்கோரி மத்திய கலாசாரத்துறை முதன்மைச் செயலர், ஏ.எஸ்.ஐ.,இயக்குனர் ஜெனரல், தமிழக தொல்லியல்துறை முதன்மைச் செயலர், கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி, அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகினர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன் பின், தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க, அகழாய்வு செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தொல்லியல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிவாரணங்கள் கோரி இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொன்றையும் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் தனித்தனியாக பரிசீலிக்க வேண்டும் என கருதுகிறோம். தொல்லியல் இடங்கள், சின்னங்களை பாதுகாப்பதற்கான தேசிய கொள்கைக்கேற்ப தகுந்த முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

