/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தானியங்கி மெக்கானிசம் சென்னிமலை விவசாயி கண்டுபிடிப்பு
/
நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தானியங்கி மெக்கானிசம் சென்னிமலை விவசாயி கண்டுபிடிப்பு
நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தானியங்கி மெக்கானிசம் சென்னிமலை விவசாயி கண்டுபிடிப்பு
நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தானியங்கி மெக்கானிசம் சென்னிமலை விவசாயி கண்டுபிடிப்பு
ADDED : நவ 05, 2024 01:25 AM
நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தானியங்கி மெக்கானிசம்
சென்னிமலை விவசாயி கண்டுபிடிப்பு
சென்னிமலை, நவ. 5--
கிணறு மற்றும் போர்வெல்களில் இருந்து, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச, ஒவ்வொரு வயலுக்கும் தனித்தனி வால்வு கொண்ட கண்ட்ரோலரை (கட்டுப்பாட்டு கருவி), விவசாயிகள் தற்போது பயன்படுத்துகின்றனர். அதாவது ஆறு வயல்கள் இருந்தால், ஆறு குழாய்கள் அமைத்து, ஒவ்வொன்றிலும் தனித்தனி வால்வு பொருத்தி, மொபைல்போன் மூலம் தானியங்கி முறையில் இயங்கும் வகையிலான கருவி பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஒவ்வொரு வால்வுக்கும், 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு வால்வுகளுக்கு, 60 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இத்துடன் கட்டுப்பாட்டு கருவி சேர்த்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இதனால் பல விவசாயிகள் வால்வுகளை பொருத்துவதை விரும்புவதில்லை.
இந்நிலையில் சென்னிமலை அருகே மணிமலை, காளிக்கோ நகரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன், 52, குறைந்த செலவில் இயங்கும் தானியங்கி வால்வை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தற்போதுள்ள தண்ணீர் பாய்ச்சும் வால்வு, கட்டுப்பாட்டு கருவியை, சாதாரண, நடுத்தர விவசாயிகளால் செலவு செய்து பொருத்த முடிவதில்லை. இதனால் மின்சார மூலம் இயங்கும் வால்வை கண்டுபிடித்துள்ளேன். நிலையாக பொருத்தப்பட்டுள்ள ஒரு பெரிய குழாய்க்குள் மோட்டாரில் இருந்து வரும் தண்ணீர் உள்ளே செல்லும். அதே குழாயில் தண்ணீர் வெளியேற ஆறு வழி உள்ளது. குழாய்க்குள் உள்ள மெக்கானிசத்தை ஆட்டோமேட்டிக் கண்ட்ரோலர் மற்றும் சிறு அளவிலான மின் மோட்டார் மூலம் இயக்கி, தேவையான நேரத்துக்கு தேவையான வழியில் தண்ணீரை அனுப்பி கொள்ளலாம். இதில் குழாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடியும். இதில் ஆட்டோமேட்டிக் வால்வுகள் அனைத்தும் ஒரே குழாய்க்குள் இயங்குவதாலும், இந்த வால்வுகளை இயக்க ஒரு கண்ட்ரோலர் மற்றும் ஒரு மோட்டார் மட்டுமே தேவைப்படுவதாலும், செலவு குறையும். இந்த சோதனையை மூன்றாவது முறையாக செய்தபோதுதான் வெற்றி கிடைத்தது. இவ்வாறு கூறினார்.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சுப்பிரமணியனுக்கு, மனைவி, ஒரு மகன் உள்ளனர். ஏற்கனவே, 2,000ல் தனது கண்டுபிடிப்பாக, தமிழ்நாடு அறிவியல் விருது, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம், 2005ல் தேசிய விருதும் பெற்றுள்ளார்.

