/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினாவில் 20 ஏக்கர் சுத்தமாக இருந்தா போதுமா? மற்ற பகுதிகளில் உடைந்த கண்ணாடியால் ஆபத்து
/
மெரினாவில் 20 ஏக்கர் சுத்தமாக இருந்தா போதுமா? மற்ற பகுதிகளில் உடைந்த கண்ணாடியால் ஆபத்து
மெரினாவில் 20 ஏக்கர் சுத்தமாக இருந்தா போதுமா? மற்ற பகுதிகளில் உடைந்த கண்ணாடியால் ஆபத்து
மெரினாவில் 20 ஏக்கர் சுத்தமாக இருந்தா போதுமா? மற்ற பகுதிகளில் உடைந்த கண்ணாடியால் ஆபத்து
ADDED : செப் 11, 2025 02:22 AM

சென்னை, மெரினா கடற்கரையில், நீலக்கொடி கடற்கரை என அறிவிக்கப்பட்ட, 20 ஏக்கர் பகுதியை மட்டும் சுத்தமாக வைப்பதில் மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது.
அதையொட்டியுள்ள மற்ற பகுதிகளில் ஆங்காங்கே, கண்ணாடி பாட்டில் கள் உடைந்து கிடப்பது, கடற்கரைக்கு வருவோரின் கை, கால்களை பதம் பார்த்து வருகிறது. இது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை நேப்பியார் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை, 2.4 கி.மீ., நீளம் உடையது.
இதன் பரப்பளவு அதிகம் இருக்கும் நிலையில், மெரினா நீச்சல் குளம் அருகே, 20 ஏக்கர் பரப்பளவை, நீலக்கொடி சான்றிதழ் பெற்றப்பட்ட கடற்கரையாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
இங்கு, சிறுவர் விளையாட்டு திடல், பெரியவர்கள் அமரும் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த, 20 ஏக்கர் பரப்பளவு இடத்தை சுத்தமாக வைத்திருக்கும் வகையில், 100 துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, துாய்மைப்படுத்தி வருகின்றனர்.
அந்த, 20 ஏக்கர் பரப்பளவு மட்டும் எப்போதும் பராமரிக்கப்படும் நிலையில், அதையொட்டி உள்ள மற்ற பகுதிகள் குப்பை கூளமாக காட்சி அளிக்கின்றன.
ஆங்காங்கே மது பாட்டில்கள் கிடப்பதுடன், அவை உடைந்த நிலையில், துண்டு, துண்டாக உள்ளன.
கண்ணாடி துண்டுகள், காலணி அணியாமல் வருவோரின் கால்களை பதம் பார்ப்பதுடன், மணற்பரப்பில் விளையாடும் குழந்தைகளின் கைகளையும் காயப் படுத்தி வருகிறது.
நீலக்கொடி கடற்கரை பகுதிகளில் மட்டும் மது பாட்டில்கள், உடைந்த கண்ணாடி துண்டுகள் இல்லாமல் சுத்தமாக பராமரிக்கும் மாநகராட்சி, அருகாமை கடற்கரையை, கண்டு கொள்ளாமல் இருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, கடற் கரைக்கு வரும் மக்கள் கூறியதாவது:
மெரினா கடற்கரையில் நீலக்கொடி பரப்பு மட்டுமே சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும், உடைந்த கண்ணாடி துண்டுகள் காணப்படுகின்றன.
இவற்றை குழந்தைகள் எடுத்து விளையாடினால், கைகளில் காயம் ஏற்படுவது உறுதி. நீலக்கொடி கடற்கரையை சுத்தப் படுத்துவதுபோல், மெரினாவின் அனைத்து கடற்கரை பரப்பையும், உடைந்த கண்ணாடி துண்டுகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
இதற்காக வாங்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
மெரினாவில் இரவு நேரங்களில் அதிகம் பேர் மது அருந்துவது தொடர்கிறது. 2.4 கி.மீ., பரப்பளவுக்கு ஐந்துக்கு குறைவான போலீசார் தான் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
எனவே, போலீசார் கண்காணிப்பை தீவிரப் படுத்தி, சட்டவிரோத செயல்களையும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.