ADDED : டிச 29, 2025 04:21 AM

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பருவாய் கிராமத்தைச் சேர்ந்த, 78 வயது விவசாயியின் கண்ணீர் வாக்குமூலம்:
பருவாய் கிராமத்தில், மனைவி - மகனுடன் வசிக்கிறேன். மனைவி வழியிலான சொத்தின் ஒரு பகுதி, எங்கள் பங்காக உள்ளது. கடந்த ஆண்டு, அந்த சொத்தின் வில்லங்க சான்று எடுத்தபோது, வேறு சிலரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றேன். அன்று பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி, லஞ்சம் பெற்றுக் கொண்டு, முறைகேடாக வேறு ஒருவருடைய பெயர் சேர்த்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, கிராம நிர்வாக அதிகாரியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டேன். எந்தப்பயனும் இல்லை. பல்லடம் தாசில்தாரிடம் மனு கொடுத்தேன். தாசில்தாரிடமிருந்து, மண்டல துணை தாசில்தாரிடம் மனு சென்றது.
அவரிடம் நடையாய் நடந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடைசியாக எனது மனு, ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பி உள்ளதாகவும், அங்கிருந்து உத்தரவு வந்தால்தான் எதுவும் செய்ய முடியும் என்று கூறி காலம் கடத்தினர்.
நானும் அலையாத நாளில்லை. ஒரு நாள், எனது கோரிக்கை மனு விவரத்தை அறிந்து கொண்டு வந்து என்னை சந்தித்த புரோக்கர் ஒருவர், 'வேலையை முடித்து தர மண்டல துணை தாசில்தார் பணம் எதிர்பார்க்கிறார்' என்றார்.
வயதான காலத்தில் அலைய முடியாமல், சொத்தை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பதட்டத்தில் நான் இருந்ததை அந்நபர் அறிந்துகொண்டு சிறிது சிறிதாக லட்சம் ரூபாயை நெருக்கி என்னிடம் லஞ்சம் பறித்துக்கொண்டார். அதன்பிறகும் கூட எனது மனு மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
அதன் பின் எனக்கு அறிமுகமான நபர்கள் வாயிலாக, அந்த லஞ்ச பணத்தை எப்படியோ ஒரு வழியாக மீட்டு விட்டேன். ஆனால் முறைகேடாக சேர்க்கப்பட்ட பெயர்கள் இன்று வரை நீக்கப்படவில்லை. 'முதியவர்' என்றும் பார்க்காமல், இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகள் என்னை அலைக்கழித்து வருகின்றனர், என, தெரிவித்துள்ளார்.
தொடரும்...
![]() |


