'தினமலர் - பட்டம்' நடத்திய பிரமாண்ட செஸ் போட்டி 212 பள்ளிகள், 965 மாணவர்கள் பங்கேற்று உற்சாகம்
'தினமலர் - பட்டம்' நடத்திய பிரமாண்ட செஸ் போட்டி 212 பள்ளிகள், 965 மாணவர்கள் பங்கேற்று உற்சாகம்
UPDATED : செப் 14, 2025 12:00 AM
ADDED : செப் 14, 2025 07:56 AM

சென்னை:
'தினமலர்' நாளிதழின், மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கான பிரமாண்ட சதுரங்க போட்டி, வி.ஐ.டி., பல்கலையில் நேற்று நடந்தது. 965 மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்று விளையாடினர்.
பள்ளி மாணவ - மாணவியரின் கல்வித்திறனை மட்டுமின்றி, அவர்களின் தனித்திறன்களையும் வளர்த்தெடுக்கும் நோக்குடன், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'பட்டம்' இதழ் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த இதழ் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான சதுரங்க போட்டி கடந்தாண்டு நடைபெற்றது. அதற்கு பள்ளிகள் அளவிலும், மாணவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து இந்த ஆண்டும், பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை, வி.ஐ.டி., பல்கலை அரங்கில் நேற்று நடந்தது. 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார். 'பட்டம்' இதழ் பதிப்பாசிரியர் வெங்கடேஷ், வி.ஐ.டி., பல்கலை கூடுதல் பதிவாளர் மனோகரன், 'தினமலர்' நாளிதழ் துணை பொதுமேலாளர் சேகர் ஆகியோர், குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தனர்.