சக்கரம் இல்லாமல் மும்பையில் தரையிறங்கிய விமானம்: பயணிகள் அதிர்ச்சி
சக்கரம் இல்லாமல் மும்பையில் தரையிறங்கிய விமானம்: பயணிகள் அதிர்ச்சி
ADDED : செப் 12, 2025 05:25 PM

மும்பை: குஜராத்தில் இருந்து மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் சக்கரம் இல்லாமல் தரையிறக்கப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியில் உறைந்த பயணிகள், பத்திரமாக வெளியே வந்த பிறகு நிம்மதியடைந்தனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத்தின் கண்ட்லா நகரில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான கியூ 400 விமானம் மும்பைக்கு இன்று 80 பயணிகளுடன் கிளம்பியது. கிளம்பி சென்ற பிறகு, விமானத்தின் மூக்குப்பகுதியில் இருந்த வெளிப்புற சக்கரம் ஒன்று ஓடுபாதையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையரகம் மூலம் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், விமானம் தொடர்ந்து மும்பைக்கு சென்றது. தரையிறங்க 20 நிமிடங்கள் இருந்த நிலையில், சக்கரம் இல்லாதது குறித்து பயணிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதனால், பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மும்பை விமான நிலையத்தில் அவசரகால நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. சக்கரம் இல்லாமலேயே விமானத்தை விமானி சாதுர்யமாக தரையிறக்கினார். இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். இதன் பிறகு, அந்த விமானம் அதன் ஆற்றலை பயன்படுத்தி முனையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்படுவது சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.