ஏஐ உதவியுடன் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ: பாஜ கண்டனம்
ஏஐ உதவியுடன் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ: பாஜ கண்டனம்
ADDED : செப் 12, 2025 04:29 PM

புதுடில்லி: ஏஐ உதவியுடன் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ, பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது. இதன் மூலம் அக்கட்சி அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளது.
பீஹார் காங்கிரஸ் நேற்று ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இது பிரதமரின் தாயாரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது.
வெட்கப்படணும்
வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜவின் செஷாத் பூனவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் விவாதங்கள் தரம் குறைந்ததற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. பிரதமரின் தாயாரை அவமதித்ததற்கு வருத்தப்படுவதற்கு பதிலாக, காங்கிரஸ் அதனை நியாயப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்டவரை பொய் கூறி பாதுகாத்து வருகிறது.
இப்போது பீஹார் காங்கிரஸ், ஒரு அருவருப்பான வீடியோ உடன் அனைத்து வரம்புகளையும் மீறவிட்டது. அக்கட்சியின் துஷ்பிரயோகத்தையே இது காட்டுகிறது. பெண்களை அவமானப்படுத்துவது என்பது அக்கட்சியின் அடையாளமாக மாறிவிட்டது. நம்முடன் இல்லாதவர் பற்றி வீடியோ வெளியிட்டதற்கு காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்டது. முதலில் காங்கிரஸ் மேடையில் இருந்து பிரதமரின் தாயாரை அவமதித்தனர். தற்போது வீடியோ மூலம் மீண்டும் அவமதிக்கின்றனர். இதனால், பீஹார் மக்கள் கோபத்தில் உள்ளதால், தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அந்தப் பதிவில் பூனவாலா கூறியுள்ளார்.
மன்னிப்பு வேண்டும்
பாஜவின் அர்விந்த் குமார் சிங் கூறுகையில், பிரதமரின் தாயார் குறித்து ஏஐ மூலம் காங்கிரஸ் வீடியோ வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது. கோடிக்கணக்கான தாயார்களின் உணர்வுகளை அக்கட்சி புண்படுத்தி உள்ளது. நமது நாட்டில் தாய்மார்களை கடவுள் துர்கை, லட்சுமி, சரஸ்வதியாக போற்றி வருகிறோம். காங்கிரஸ் தலைவர்கள் இதற்காக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
காங் விளக்கம்
அதேநேரத்தில் காங்கிரசின் பவன் கேரா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமரின் தாயாரை எந்த இடத்தில் அவமதிக்கும் வகையில் காட்சி உள்ளது. ஏதாவது ஒரு வார்த்தை, ஒரு குறியீட்டை காட்ட முடியுமா? தங்களது குழந்தைக்கு பாடம் சொல்லித் தர வேண்டியது பெற்றோரின் கடமை. அவர், தனது குழந்தைக்கு பாடம் தான் எடுக்கிறார். ஒரு குழந்தை, இதனை அவமரியாதை எடுத்தால், அது தலைவலி. எங்களுக்கு அல்ல உங்களுக்கு.
பாஜ ஒவ்வொரு விஷயத்தையும் அரசியல் ஆக்கி போலியாக கருணையை உருவாக்க வேண்டியது ஏன். பிரதமர் அரசியலில் உள்ளார். அனைத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் நகைச்சுவையையும் ஏற்க வேண்டும். தற்போது நகைச்சுவை இல்லை. இது எங்களின் அறிவுரை. இவ்வாறு அவர் கூறினார்.