பழங்குடியினர் விவசாய நிலங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம்: மஹா., அரசு முடிவு
பழங்குடியினர் விவசாய நிலங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம்: மஹா., அரசு முடிவு
UPDATED : செப் 21, 2025 04:50 AM
ADDED : செப் 21, 2025 01:31 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள பழங்குடியின விவசாயிகள், தங்கள் நிலத்தை இனி, தனியாருக்கு குத்தகைக்கு விடலாம். அதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வரப்போவதாக அம்மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கூறியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் பழங்குடியின விவசாயிகள், தங்கள் நிலத்தை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு விட முடியாது.
இந்நிலையில், அவர்களுக்கு வருவாயை ஏற்படுத்தி தரும் வகையில், குத்தகை விடுவதற்கான சட்டத்தை கொண்டு வர மஹாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அம்மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கூறியதாவது:
விவசாயம், கனிமங்களை வெட்டி எடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வசதியாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டத்தின்படி விவசாயிகள் இனி நேரடியாக தங்கள் நிலத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட முடியும்.
வேளாண் துறையில் தனியாரின் முதலீடு அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குத்தகை நடைமுறையில் மோசடிகளை தடுக்க, மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில், ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். குத்தகை தொகை ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் வீதம் ஓராண்டுக்கு நிர்ணயிக்கப்படும்.
அல்லது ஒரு ஹெக்டேருக்கு, ஆண்டுக்கு 1.25 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும். இதில் உயர்வான குத்தகை தொகையை விவசாயிகளும், தனியாரும் பரஸ்பரம் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல் கனிமங்களை வெட்டி எடுக்கவும் பழங்குடியின விவசாயிகளுக்கு அனுமதி தரப்படும். இதற்காக தனியார் நிறுவனங்களுடன் அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தங்கள் நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு டன் கனிமங்களுக்கு குறிப்பிட்ட அளவு வரை பணம் வழங்கப்படும். அந்த தொகை எவ்வளவு என்பது விரைவில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.