பெட்ரோல் பங்க் எண்ணிக்கை 1 லட்சம் ஆனது; 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிப்பு
பெட்ரோல் பங்க் எண்ணிக்கை 1 லட்சம் ஆனது; 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிப்பு
ADDED : டிச 26, 2025 01:02 AM

புதுடில்லி: நாடு முழுதும் பெட்ரோல் பங்க் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, ஊரகப் பகுதிகளிலும் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
மூன்றாம் இடம்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நாடு முழுதும் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி இருக்கின்றன. இதனால், சரக்கு போக்குவரத்து நாடு முழுதும் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.
வாகன பெருக்கத்திற்கு ஏற்றபடி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்பும் பெட்ரோல் பங்க் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக 2015 முதல் ஊரகப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் புதிது, புதிதாக பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதனால், இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியுடன் அதன் எண்ணிக்கை 1 லட்சத்து 266 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக பெட்ரோல் பங்க்குகள் உடைய நாடுகளில், நமக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
இரட்டிப்பு
மத்திய எண்ணெய் வள அமைச்சகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் 90 சதவீதம், 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' மற்றும் 'ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' நிறுவனங்களுக்கு சொந்தமானவை.
தனியார் நிறுவனத்தில் ரஷ்யாவின், 'நயாரா எனர்ஜி' நிறுவனம் மொத்தம் 6,921 பெட்ரோல் பங்க்குகளை இயக்குகிறது. அதற்கு அடுத்தபடியாக, 'ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்' 2,114 பெட்ரோல் பங்க்குகளும், 'ஷெல்' நிறுவனம் 346 பங்க்குகளும் திறந்துள்ளன.
கடந்த 2015ல் இதன் எண்ணிக்கை, 50,451 ஆக இருந்த நிலையில், தற்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் மொத்தம் ஒரு லட்சத்து 15,228 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன.

