ADDED : செப் 12, 2025 03:45 AM

சென்னை: பீஹார் மாநில இளைஞர்களை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அதிகளவில் மூளைச்சலவை செய்து வருவதாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பதுங்கியிருந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அஹலதுர் முகமது என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப் படையில், இரு தினங்களுக்கு முன், ஜம்மு - காஷ்மீர் மற்றும் தமிழகம், பீஹார் உட்பட ஐந்து மாநிலங்களில், 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை ஆய்வு செய்தபோது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை குறி வைத்து, பாக்., பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்வது தெரிய வந்துள்ளது.
பீஹார் மாநில இளைஞர்களும், சிரியா நாட்டில் உள்ள ஐ.எஸ்., மற்றும் அல் குவைதா அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளும், சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானை தலைமை இடமாக வைத்து, ஜெய்ஷ் - இ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், நேபாளம் வழியாக பீஹாருக்குள் ஊடுருவி, அங்குள்ள முஸ்லிம் இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்த்து வருவதும் தெரிய வந்துள்ளது.
பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள இளைஞர்கள், தினக்கூலி தொழிலாளிகள் போல தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால், நாடு முழுதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, போலீசார் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.