ADDED : டிச 25, 2025 08:40 PM

துாத்துக்குடி : 'ஜல்லிக்கட்டு வளாகத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டியுள்ளீர்களே, அவர் மாடுபிடி வீரரா?' என தி.மு.க., அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுாரில் நேற்று இரவு நடந்த வேலு நாச்சியார் நினைவு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:வேலு நாச்சியார் வழியில் வந்த நம் தமிழ் பெண்கள், 1,000 ரூபாய்க்கு அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஈ.வெ.ராமசாமி வந்த பின்தான் பெண்களுக்கு உரிமையை பெற்று தந்தாரா? நம் தமிழ் பேரரசி வேலு நாச்சியார், ஏழு மொழி கற்று, வாள் வீச்சு, வில்லம்பு, சிலம்பம், குதிரை ஏற்றம், போர் பயிற்சி பெற்று இருந்தார்.
தற்போதைய ஆட்சியாளர்கள், திராவிட அடையாளங்களை நிறுவிக்கொண்டே வருவர். மானங்கெட்ட மனிதர், 1,000 ரூபாய்க்கு ஓட்டு போடுவர். திராவிடன் என்பதே தமிழன் அல்லாதவன் வாழ்வதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்று.டாஸ்மாக் கட்டடம் இடிந்து யாரேனும் உயிரிழந்திருக்கின்றனரா? ஆனால், திராவிட மாடல் ஆட்சியில், அரசு பள்ளி கட்டடம் இடிந்து மாணவ - மாணவியர் இறக்கின்றனர்.
பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் ஜல்லிக்கட்டு வளாகம் நாங்கள் கேட்கவில்லை. கம்பு கட்டி நடத்திக் கொள்வோம். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மட்டும் தான் கேட்டோம். ஜல்லிக்கட்டு வளாகத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தீர்கள். அவர் என்ன ஜல்லிக்கட்டு விளையாடினாரா; மாட்டை அடக்கினாரா அல்லது மாடுபிடி வீரரா?எதைப் போற்றுவது, எதை துாற்றுவது என தெரியாமல் தற்குறி கூட்டம் உலாவி வருகிறது.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சொல்லுக்கு அடித்தளம் இட்டதே நான் தான். நம் கட்சியின் வண்ணக்கொடி தான், த.வெ.க.,வுக்கும். துாய சக்தி என கூறுபவர், 'ஜனநாயகன்' படத்திற்கு பிளாக் டிக்கெட் கிடையாது என கூறுவாரா?. எத்தனை பேர் பேரம் பேசியும் விலை போகாதவன் நான். திருச்சியில், வரும் பிப்., 21ல் நடக்கும் மாநாட்டில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.

